முகைதீன் ராஜினாமா செய்ய வேண்டும் ! - சபா பெர்சாத்து முழக்கம்
- Muthu Kumar
- 04 Dec, 2025
கோத்த கினபாலு, டிசம்பர் 4:
சபா பெர்சாத்துவின் செயலாளர் யூனுஸ் நூர்டின் 17வது சபா மாநிலத் தேர்தலில் கட்சியின் படுதோல்விக்குக் காரணம், கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகிதீன் யாசினின் தலைமையிலான பலவீனங்கள் என்று குற்றம் சாட்டினார்.
சபா பெர்சாத்துவின் இயந்திரம் தேர்தலுக்கு தீவிரமாகத் தயாராகி வந்ததாகவும், ஆனால் முகிதீனை விமர்சித்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வெளியேற்றம் உள்ளிட்ட உள் சர்ச்சைகளால் அது தடைபட்டதாகவும் யூனுஸ் கூறினார்.
கட்சி தனது 33 வேட்பாளர்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கவில்லை என்றும், சிலர் தங்கள் பிரச்சாரங்களுக்கு நிதியளிக்க தங்கள் கார்கள், வீடுகள் மற்றும் பிற சொத்துக்களை அடகு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நிதி உதவி இல்லாததால் நிலைமை கடினமாகிவிட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிட சில வேட்பாளர்கள் தங்கள் கார்கள், வீடுகள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களை அடகு வைக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக தாங்கள் இப்போது கடனில் இருக்கிறோம். சபா பெர்சாத்துவின் தோல்வி சங்கடமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைத்துவத் தோல்விகளுக்கு தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தாங்கள விரும்புவதாக குறிப்பிட்ட அவர், மேலும் அவர் பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்தும் பெரிகாத்தான் தேசியத் தலைவர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று வலியுறுத்துவதாக அவர் இங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பெரிக்காத்தானின் கீழ் போட்டியிட்ட பெர்சாத்து, மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட 33 இடங்களிலும் தோல்வியடைந்தது. கூட்டணி கட்சியான கெராக்கான் போட்டியிட்ட மூன்று இடங்களில் எதையும் பெறத் தவறிவிட்டது, அதே நேரத்தில் PAS ஐந்து இடங்களில் ஒன்றை வென்றது.பெர்சாத்துவின் 24 சபா பிரிவுகளில் 20 பிரிவுகள் முகைதீன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும், கட்சி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தானும் அவரது ஆதரவாளர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் யூனுஸ் கூறினார்.
எங்கள் சொந்த முயற்சி மற்றும் பணத்தால் சபாவில் கட்சியை கட்டியெழுப்பியதால் பெர்சாத்துவை விட்டு வெளியேறுவது குறித்து நாங்கள் ஒருபோதும் பரிசீலிக்கவில்லை. நாங்கள் ஏன் வெளியேற வேண்டும்? பலவீனமான தலைவர்தான் ராஜினாமா செய்ய வேண்டும், என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



