இருநாட்டு உறவைப் பலப்படுத்த அன்வார், பிராபோவோ பேச்சு!

- Muthu Kumar
- 10 Jan, 2025
கோலாலம்பூர், ஜன.10-
இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவும் நேற்று விவாதித்தனர்
ரூமா தாங்சியில் அன்வாரின் தனிப்பட்ட ஏற்பாட்டில் நடைபெற்ற மதிய உணவு விருந்துபசரிப்பின்போது அவர்கள் அச்சந்திப்பை நடத்தினர்.
மலேசியாவுக்கு ஒருநாள் பணிநிமித்த வருகையை பிராபோவோ நேற்று மேற்கொண்டார். கடந்தாண்டு அக்டோபரில் இந்தோனேசிய அதிபராக பிராபோவோ பொறுப்பேற்ற பிறகு மலேசியாவுக்கு அவர் மேற்கொண்டுள்ள முதலாவது பணிநிமித்த வருகை இதுவாகும்.
மலேசியாவுக்கும் இந்தோனேசிய குடியரசுக்கும் இடையே நிலவிவரும் தனித்துவமிக்க வருகையை பிராபோவோவின் வருகை பிரதிபலிக்கிறது. பொருளாதாரம், சமூக-கலாச்சாரம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் இவ்விரு நாடுகளுக்கிடையே வலுவான ஒத்துழைப்பு நிலவி வருகிறது என்று வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மதிய உணவு விருந்துபசரிப்பு முடிவுற்றவுடன் பிராபோவோவுடன் ஒரே காரில் ஏறி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி அன்வார் புறப்பட்டார்.
பிராபோவோவின் பேராளர் குழுவில் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோவும் இடம்பெற்றிருந்தார்.
மலேசியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும். உலகளாவிய வகையில் ஏழாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் ஆசியான் நாடுகளில் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் அது திகழ்கிறது.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தக அளவு கடந்தாண்டில் 11,121 கோடி வெள்ளியாக இருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *