ஜிபிஎஸ் தலைவரின் பேச்சை அன்வாரின் உதவியாளர் சாடினார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச.31-

பிகேஆர் போன்ற தேசிய அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இல்லாத ஒரு மாநிலமாக சரவாக் இருக்க வேண்டும் என்று, காபுங்ஙான் பார்டி சரவாக்கின் (ஜிபிஎஸ்) மூத்த தலைவர் ஒருவர் கூறியிருப்பதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் உதவியாளர் ஒருவர் சாடியிருக்கின்றார்.

பார்டி பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) கட்சியின் உதவித் தலைவர் அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்ஸாவினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துகள் மூர்க்கத்தனமானவை என்று, நிதி அமைச்சர் எனும் முறையில் அன்வாருக்கு அரசியல் செயலாளராக இருக்கும் கமில் முனிம் தெரிவித்துள்ளார்.

தங்கள் மாநிலத்தின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சரவாக் மாநில மக்களிடமே விட்டுவிட வேண்டும் என்று கமில் கூறியுள்ளார்.“தங்கள் மாநிலத்திற்கு எது சிறந்தது என்பதை தேர்வு செய்யவும் முடிவெடுக்கவும் சரவாக் மக்களை அனுமதிக்க வேண்டும். கரிமின் இத்தகைய கருத்துக்கள் வெறும் ஆணவத்தின் வெளிப்பாடாகும்" என்று, பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவருமான கமில் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அம்னோ, பிகேஆர், ஜசெக மற்றும் பாஸ் போன்ற தேசிய அளவிலான கட்சிகளின் தலையீடுகள் இன்றி, சரவாக் மாநில அரசாங்கம் அம்மாநில மக்களின் கைகளிலேயே தொடர்ந்து இருந்து வர வேண்டும் என்று, கரிம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

தேசியக் கட்சிகளை நம்பியிருக்காமல் மாநிலத்தின் எதிர்காலத்தை, பிபிபி மற்றும் ஜிபிஎஸ்சின் உறுப்புக் கட்சிகள் போன்ற சரவாக்கைத் தளமாகக் கொண்டிருக்கும் கட்சிகளினால் முடிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.மத்திய அளவில் ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இடம் பெற்றிருக்கும் ஜிபிஎஸ், மாநிலத்தின் மொத்தம் 82 சட்டமன்றத் தொகுதிகளில் 80 தொகுதிகளை தன் வசம் வைத்திருக்கிறது. எஞ்சிய இரண்டு தொகுதிகளை சரவாக் ஜசெக கொண்டிருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *