வெள்ளத்தை எந்தவொரு நாட்டினாலும் மொத்தமாக தடுக்க முடியாது-அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 4-

மலேசியாவின் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால். எந்தவொரு நாட்டினாலும் வெள்ளம் ஏற்படுவதை முற்றாகத் தவிர்க்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.

திரெங்கானு மாநிலத்தில் ஒரு திட்டத்தைத் தவிர்த்து, இதர திட்டங்களின் நிர்மாணிப்புப் பணிகள் அட்டவணைக்கேற்ப சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது அன்வார் கூறினார்.

லஞ்சஊழல் குற்றச்சாட்டினாலும் செலவினத்தைக் குறைக்கும் நடவடிக்கையினாலும் பல வெள்ளத்தடுப்புத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதுதான் தற்போதைய வெள்ளப்பாதிப்புக்கு காரணமா என்று மூடா கட்சியின் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் வினவியதற்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

ஜிஆர்எஸ் கட்சியின் தஞ்சோங் மானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் யூசுப் அப்துல் வஹாப் கேட்ட துணைக் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அன்வார், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள்கூட முழு அளவில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகியவற்றில் பரந்துபட்ட வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள 1,500 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என்றுதான் நான் கூறுவேன். வெள்ளத்தடுப்புத் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவதால் மட்டும் வெள்ளப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வைக் கண்டுவிட முடியாது என்றும் அன்வார் கூறினார்.

நவம்பர் மாதத்தின் கடைசி நாளில் இதற்கு முன்னர் கண்டிராத வகையில் கனத்த மழை பெய்தது. நீண்ட வறட்சிக்குப் பின்னர் பெய்த அந்த கனத்த மழையினால் நீர்த்தேக்கங்களில் வெள்ளம் நிரம்பி கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது என்றும் அன்வார் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *