வலிப்பினால் குழந்தைக்கு இரத்தப் போக்கு ஏற்பட்டது குறித்து போலீஸ் விசாரணை!

- Muthu Kumar
- 17 Jan, 2025
(நமது நிருபர்)
சுபாங் ஜெயா, ஜன.17-
பூச்சோங்கிலுள்ள காப்பகம் ஒன்றின் தொட்டியில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது 2 மாத ஆண் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு தலையில் இரத்தப் போக்கு ஏற்பட்டது.
கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் வலிப்பு ஏற்பட்டுக் குழந்தை அழுதுகொண்டிருப்பதாக காலை 10.30 மணிக்கு அதன் தந்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் பாலியல், பெண்கள் மற்றும் சிறார் பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் எஸ்ஏசி சித்தி கம்சியா ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
அதன் பிறகு குழந்தையின் தந்தை விரைந்து காப்பக இல்லத்திற்குச் சென்று குழந்தையை சைபர்ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.குழந்தை சிவப்பு மண்டலப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதில் அதன் தலையில் இரத்தப் போக்கு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைப்படி குழந்தை அந்த காப்பகத்திற்குக் கடந்த 2 மாத காலமாக அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
தந்தையிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி குழந்தையும் அதன் அண்ணனும் காலை 8.10 மணிக்கு நல்ல நிலையில்தான் அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
அந்த குழந்தை ஓர் ஊஞ்சலில் வைத்து தூங்க வைக்கப்பட்டது.
தூக்கத்திலிருந்து காலை 9.30 மணிக்கு விழித்ததும் அதே அறையிலிருந்த தொட்டியில் காப்பாளர் குழந்தையை குளிப்பாட்டினார். இதில் குழந்தை அழத் தொடங்கி வலிப்பு ஏற்படும் வரை அழுவதை நிறுத்தவே இல்லை.
இச்சம்பவம் 2001 சிறார் சட்டம், 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய போது எஸ்ஏசி சித்தி கம்சியா ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *