பேரணி நடத்திய மாணவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 3-

கடந்த வாரம் நடைபெற்ற ஊழல் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியிருப்பதை அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் கண்டனம் செய்துள்ளனர்.
வாக்குமூலத்தைப் பதிவுசெய்து கொள்வதற்காக பத்து மாணவர்கள் நேற்று பிற்பகல் 1.30மணிக்கு டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு வந்திருந்தனர்.

நாடு ஊழலிலிருந்து விடுபட வேண்டுமென்று போராடுவது ஒரு குற்றமா? புலன்விசாரணையின் வாயிலாகவும் மிரட்டல் வாயிலாகவும் இளைஞர்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என்று பேரணியை ஏற்பாடு செய்த ஹிம்புனான் ரக்யாட் பெஞ்சி ரசுவா எனும் குழுவின் பேச்சாளர் ஸாயிம் ஸூல்கிப்ளி நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

அம்மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஒன்றரை மணிநேரத்திற்குப் போலீசார் விசாரணை நடத்தினர்.மாணவர்களிடம் 27 கேள்விகள் கேட்கப்பட்டன. தங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் பட்சத்தில், அக்கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் பதிலளிப்போம் என்று போலீசாரிடம் அவர்கள் கூறினர் என்று ஸாயிம் தொடர்ந்து கூறினார்.

2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்தின் 9(5) ஆவது பிரிவின்கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஐந்து வழக்கறிஞர்களோடு வந்த மாணவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது என்பதை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுலிஸ்மி அபெண்டி சுலைமான் உறுதிப்படுத்தினார். ஆயினும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இதர சில மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்படுமா என்பது பற்றி விவரிக்க அவர் மறுத்துவிட்டார்.

கோலாலம்பூரின் சோகோ பேரங்காடிக்கு வெளியே கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று ஊழல் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுள் பல்கலைக்கழக மாணவர்களே பெரும்பான்மையினராக இருந்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *