வாகனங்களை நிறுத்தாமல் “டோல்” முறை: அடுத்த மாதம் அறிக்கை தாக்கல்-அமாட் மஸ்லான்!

- Muthu Kumar
- 17 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 17-
சாலைப் பயனர்கள் தங்களின் வாகனங்களின் வேகத்தைக் குறைக்காமலோ நிறுத்தாமலோ சாலைக் கட்டணத்தை (டோல்) செலுத்த வகை செய்யும் புதிய முறை பற்றிய அமைச்சரவை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்.பல தடங்களில் வாகனங்கள் சீராக செல்வற்கு வழிவகுக்கும் இப்புதிய திட்டம் எவ்வாறு செயல்படும் என்பதை அந்த அறிக்கை வரையறுக்கும் என்று பொதுப்பணித்துறை துணையமைச்சர் அமாட் மஸ்லான் குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலை நிறுவனங்களுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தை தொடராது என்பதை அறிவிக்கும் கடிதங்களைப் பொதுப்பணி அமைச்சு அந்நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் அப்பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அமாட் மஸ்லான்.
எம்எல்எஃப்எஃப் எனப்படும் அப்புதிய சாலைக் கட்டண முறை சம்பந்தப்பட்ட அறிக்கையை பொதுப்பணி அமைச்சு தயாரித்து வருகிறது. அது வரும் ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பூச்சோங், பூலாவ் மெராந்தியில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
எம்எல்எஃப்எஃப் சாலைக்கட்டண முறையினால் சாலைக் கட்டண வசூல் அதிகரிக்கும். அதே வேளையில், வாகன நெரிசலையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் 33 நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களில் பதின்மூன்று நிறுவனங்கள் எம்எல்எஃப்எஃப் திட்டத்தை எதிர்க்கின்றன என்றும் அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *