4ஆவது மாடியிலிருந்து குதிக்க முயன்ற பெண் தீயணைப்புப் படையினரால் மீட்பு!

- Muthu Kumar
- 30 Dec, 2024
கோலாலம்பூர், டிச.30-
ஸ்ரீ பெட்டாலிங்கிலுள்ள ஓர் அடுக்ககத்தின் 4ஆவது மாடியிலிருந்து கீழே குதிக்க முயன்ற ஒரு பெண்ணைத் தங்களின் விரைவு, திறன்மிக்க நடவடிக்கைகளால் தீயணைப்புப் படையினர் காப்பாற்றினர்.
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் காலை 11.59 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து புக்கிட் ஜாலில்
தீயணைப்பு நிலையத்திலிருந்து 7 தீயணைப்புப் படையினர் பெண்ணை மீட்கச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நடவடிக்கை கமாண்டரும் 1ஆவது மூத்த தீயணைப்பு ஆணையருமான ரொஸ்மாவி இஸ்மாயில் தெரிவித்தார்.
இதில் அப்பெண்ணைச் சமாதானப்படுத்தத் தீயணைப்புப் படையினருக்கு உதவுவதில் போலீஸ்காரர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர்.இறுதியில் 33 வயதுடைய அப்பெண் சமாதானப்படுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
அதன் பிறகு மேல் நடவடிக்கைக்காக அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து குதிக்க முயன்ற அப்பெண்ணைக் காப்பாற்ற அதன் நுழைவாயில் கதவின் பூட்டைத் தீயணைப்புப் படையினர் வெட்ட வேண்டியதாயிற்று என்று ஓர் அறிக்கையில் ரொஸ்மாவி இஸ்மாயில் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *