முடிவு எத்தகையதாக இருந்தாலும் மேல்முறையீடு செய்யமாட்டேன்-ஹசான் கரீம்!

- Muthu Kumar
- 24 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 24-
தமக்கு எதிராக கட்சி எத்தகைய முடிவை எடுத்தாலும், அதற்காக தாம் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று.பிகேஆரின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை கூடவிருப்பதாக கூறப்படும் பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தம்மை உறுப்பியத்துவத்திலிருந்து இடைநீக்கம் செய்வது உட்பட வேறு எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதற்காக மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று அவர் உறுதிப்பட தெரிவித்திருக்கின்றார்.
கட்சியின் முடிவெடுக்கும் செயல்பாட்டை தாம் மதிப்பதாக ஹசான் கூறியிருப்பதாக பெரித்தா ஹரியான் நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.“கடந்த வியாழக்கிழமை நடந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுடனான விசாரணையில் நான் கலந்து கொண்டேன். ஆனால், இன்னும் முடிவேதும் செய்யப்படவில்லை. என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், விசாரணையின் முடிவை வைத்து அவர்கள் பரிந்துரை செய்வார்கள்.
“அதன் பின்னர் பிகேஆர் அரசியல் பிரிவிடம் தெரிவிக்கப்பட்டு பிறகு, கட்சித்தலைவர் தலைமையிலான மத்திய தலைமைத்துவ மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று ஜொகூர், பாசிர் கூடாங்கில் நேற்று சனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹசான் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது 5ஜி இணையத் திட்டத்தை யூ மொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது உட்பட அரசாங்கத்தின் பல்வேறு முடிவுகள் குறித்து பொதுவில் குறைகூறியதற்காக அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஹசானுக்கு அண்மையில் அழைப்பாணையை அனுப்பியிருந்தது.மாட்சிமை தங்கிய பேரரசரை அவர் அவமதித்ததாகவும் பிகேஆர் கட்சியின் தோற்றத்தை களங்கப்படுத்தியதாகவும் ஹசான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது என்று, கட்சி வட்டாரம் ஒன்று கூறியிருந்தது.ஹசானின் எதிர்காலம் குறித்த ஓர் இறுதி முடிவு கட்சியின் உயர்மட்ட தலைமைத்துவத்தினால் எடுக்கப்படும் என்று, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டான் இ கியூ சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
அரசக் குடும்பத்தைக் குறைகூறுவதை தவிர்த்து விட்டு, வேறு எந்த தலைப்பிலும் எழுதுவதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமக்கு பச்சைக் கொடி காட்டியிருந்ததாக ஹசான் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *