முஸ்லிம் அல்லாதார் சமய விவகார மைச்சர் பதவி- அமைச்சரவை நிராகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

சுபாங் ஜெயா, . 15-

முஸ்லிம் அல்லாதாரின் சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக தனியாக ஓர் அமைச்சர் பதவியை உருவாக்க வேண்டும் என்று ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹூய் முன்வைத்திருந்த பரிந்துரையை அமைச்சரவை நிராகரித்துள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.

இந்தப் பரிந்துரை ரவூப் நாடாளுமன்ற உறுப்பினரான அவரின் தனிப்பட்ட கருத்தாகும் என்று அவர் குறிப்பிட்டார். அந்தப் பரிந்துரைக்கு அரசாங்கத்தைச் சேர்ந்த எவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அமைச்சரவையில் கூட எவரும் இதனை ஆதரிக்கவில்லை என்று சுபாங் ஜெயாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பிரதமர் கூறினார்.

அமைச்சர்களின் நியமன விவகாரம் பிரதமரின் பிரத்தியேக உரிமையாகும் என்று விளக்கிய அவர், முஸ்லிம் அல்லாதாரின் சமய விவகாரங்கள் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஏரன் அகோ டாகாங்கின் ஆளுமைக்கு உட்பட்டதாகும் என்று சுட்டிக் காட்டினார்.
மேலும், சமய விவகார மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர்களின் தலைமையில் சமய நல்லிணக்கக் குழுவும் இந்த விவகாரத்தைக் கவனித்து வருகிறது. எனவே, முஸ்லிம் அல்லாதாரின் சமய விவகாரங்களைக் கவனிப்பதற்கு இவை போதுமானதாகும் என்றார் அவர்.

முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் என பிரதமர்துறையில் இரண்டு சமய விவகார அமைச்சர் பதவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று சௌ அண்மையில் பரிந்துரைத்திருந்தார்.முஸ்லிம் அல்லாதாரின் விழாக்களிலும் இறுதிச் சடங்குகளிலும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்கள்
கலந்துகொள்வது தொடர்பான வழிகாட்டிகள் வெளியிடப்பட வேண்டும் என்று சமய விவகார அமைச்சர் நயீம் மொக்தார் அண்மையில் கூறியிருந்தார்.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், சௌ தமது பரிந்துரையை முன்வைத்திருந்தார்.இதனிடையே, காலியாக இருக்கும் அமெரிக்காவுக்கான மலேசியத் தூதர் பதவிக்கு ஒரு வேட்பாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அன்வார் நேற்று தெரிவித்தார். ஆனால், அவரின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.பஹ்ரேனில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமைச் சந்திக்கச் செல்லும்போது அந்த வேட்பாளரின் பெயரை அவரிடம் சமர்ப்பிப்பேன் என்று அன்வார் கூறினார்.

மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக சுல்தான் இப்ராஹிம் கடந்த வாரம் பஹ்ரேனுக்குக் கிளம்பினார்.அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக இதுவரை பணியாற்றிவந்த முன்னாள் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஸிஸின் பதவிக் காலம் இம்மாதம் 8ஆம் தேதியன்று முழுமையடைந்ததைத் தொடர்ந்து அப்பதவி காலியானது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *