அரசியல் சுயநலத்திற்காக வழிபாட்டுத்தலங்களின் புனிதத்தைக் கெடுக்காதீர்! - துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

- Shan Siva
- 06 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 6: நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்களில், அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுயநலத்தை செயல்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தை எந்தவோர் அரசியல் கட்சியும் மாசுபடுத்தக்கூடாது என்று ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை ஆதரித்து இன்று பத்துமலை திருத்தலத்தில்
அவருக்கு ஆதரவாக மஇகா பேரணி நடத்தவிருப்பதை தாம் அறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ நஜிப்பின் சிறைத்தண்டனையை வீட்டுக்காவலாக அறிவிக்க வேண்டும் என்று
இதற்கு முன்னர் நீதிமன்றங்களில் முறையிடப்பட்டன. அதுகுறித்த மேல் முறையீடு இன்று
புத்ராஜெயாவிலுள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அரசியல் உள்நோக்கங்களால் இதுபோன்ற பிரச்சினைகள் கோயில்களில் நடத்தப்படும் உள்
நோக்கம் கொண்ட செயல்களையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் சொன்னார்.
வழிபாட்டுத் தலங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் இருந்து விடுபட்டு
பிரார்த்தனை, ஆன்மிக மேம்பாட்டுக்காக
அர்ப்பணிக்கப்பட்ட புனித இடங்களாக இருக்க வேண்டும். நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்களை
கண்காணிக்கும் சமூகத் தலைவர்களும் ஆலயநிர்வாகத்தினரும் அரசியல் தலையீடுகளைத்
தடுப்பதில் மிகவும் பொறுப்புடன் செயல்படுவதுடன் அதன் நெறிமுறைகளைக்
கடைப்பிடிக்க வேண்டும்.
பத்துமலைத் திருத்தலத்தை இதுபோன்ற அரசியல் கூட்டங்களுக்கு பயன்படுத்த
அனுமதிப்பது வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மையும் நடுநிலைமையும் தவறிய
செயலாகும். இதுபோன்ற செயல்கள்
எதிர்காலத் தலைமுறையினருக்கு மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். வழிபாட்டுத்
தலங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு பயன்படுத்தப்படும்போது நல்லிணக்கத்தை
மேம்படுத்துவதற்கு பதிலாக அது பிளவுகளை உருவாக்க வழிவகுக்கிறது.
கூட்டரசு அரசியலமைப்பின் 42 (1, (2) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட தனிச் சிறப்பு அதிகாரங்கள் குறித்து
மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி மாமன்னர் வெளியிட்ட அறிக்கைக்கு மரியாதை கொடுப்பதோடு அதனைக்
கடைப்பிடிப்பதையும் அரச மலேசிய போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அரச மலேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ
ரஸாருடின் ஹுசேன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மன்னிப்புக் கோருபவர்கள்
தங்கள் விண்ணப்பங்களை மன்னிப்பு வாரியத்திடம் சட்டத்தின்படி சமர்ப்பிக்க
வேண்டும் என்று கூறியிருப்பதை துணை அமைச்சர் சரஸ்வதி சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், மாமன்னரின் உத்தரவை
மதித்து பொதுமக்கள் யாரும் அரசியல் கட்சியினர் ஏற்பாடு செய்யும் எந்தக்
கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என்ற வலியுறுத்தலையும் சரஸ்வதி
சுட்டிக்காட்டினார்.
நாட்டின் செழிப்பு, நல்லிணக்கத்துக்கு அவசியமான ருக்குன் நெகாராவின் கொள்கைகளையும்
சட்டத்தையும் நிலை நிறுத்துமாறு போலீஸ் துறை நாட்டு மக்களுக்கு
அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் மஇகா
துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், டத்தோஸ்ரீ நஜிப்புக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்த இதுபோன்ற கூட்டங்கள்
ஜனநாயக உரிமை என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பேரணி புத்ராஜெயாவிலுள்ள நீதிமன்ற வளாகத்திலிருந்து பத்துமலை
திருத்தலம் முருகன்: கோயிலுக்கு பேரணியை
மாற்றியிருப்பதையும் சரவணன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இந்தக் கூட்டம் மஇகாவின் ஜனநாயக உரிமை என்று
விவரிக்கப்பட்டாலும், இங்கே எழுப்பப்படுகின்ற ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், வழிபாடுகளுக்கு
மதநெறிகளைப் பயன்படுத்துவது பொருத்தம்தான். அதேவேளையில் மத நடைமுறைகளின்
புனிதத்தைப் பேணுவதற்கும் அதனைக் கடைப்பிடிப்பதற்கும் அரசியல் தலைவர்கள்
முயற்சிக்க வேண்டும். அதோடு வழிபாட்டுத்
தலங்கள் புனிதமாகவும் நடுநிலையாகவும் ஆன்மிக சமூக மேம்பாடுகளில் கவனம்
செலுத்தி பரந்துவிரிந்த சமுதாயத்திற்கு நேர்மறையான முன்மாதிரியாக இருப்பதை உறுதி
செய்ய வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வெளியிட்டுள்ள
ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *