சபா அரசைக் கவிழ்க்க சதித்திட்டம்-ஜி57அமைப்பு புகார்!

- Muthu Kumar
- 30 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 30-
சபா முதலமைச்சர் ஹஜிஜி நூருக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் ஆளும் ஜிஆர்எஸ் தலைமையிலான சபா மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறி அம்மாநிலத்தின் பொது அமைப்பொன்று போலீசில் நேற்று மற்றொரு புகாரைச் செய்தது.
குறிப்பிட்ட சில தரப்பினர் ஹஜிஜியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முனைகின்றனர் என்றும் மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்கின்றனர் என்றும் கெராக்கான் குவாசா ரக்யாட் மலேசியா (ஜி57) எனும் அந்த அமைப்பு தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளது.
ஆயினும், அவர்கள் யார் என்பதை அந்த அமைப்பு அடையாளம் காட்டவில்லை.சதிகாரர்கள் பற்றிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், அதனை இப்போதைக்கு வெளியிட முடியாது. புலன்விசாரணை நடத்தும் பொறுப்பை போலீஸ்காரர்களிடமே விட்டு விடுகிறோம் என்று அந்த அமைப்பின் தலைவர் ஜூல்கர்னைன் மதார் தெரிவித்தார். ஸ்ரீபெட்டாலிங் போலீஸ் நிலையத்தில் புகாரைப் பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
சதித்திட்ட முயற்சியை "பைத்தியக்காரச் செயல்" என்று சாடிய அவர், அம்முயற்சிகளை அவர்கள் கைவிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக போலீசில் புகார் செய்ததாகச் சொன்னார்.ஹஜிஜியை அவதூறு செய்ததாகக் கூறி சபா மாநில அரசு சார்பு நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக இம்மாதம் 14ஆம் தேதியன்று ஜி57அமைப்பு புகார் செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குத்தகையாளர்களுக்குத் தொழில்திட்டங்களைப் பெற்றுத்தரும் ஓர் ஊழல்வாதி என்று ஹஜிஜியை அந்த உயர்அதிகாரி வருணித்திருந்தார். அக்குற்றச்சாட்டு சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *