1பெஸ்தாரிநெட் திட்டம் தொடர்பில் யார் மீதும் குற்றம் சுமத்தப்படாது!

- Muthu Kumar
- 20 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 20-
தற்போது செயல்படுத்தப்படாமல் இருக்கும், 400 கோடி வெள்ளி மதிப்பிலான 1பெஸ்தாரிநெட் திட்ட அமலாக்கம் தொடர்பில் யார் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படாது என்று, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்துள்ளது.
அத்திட்ட அமலாக்கத்தில் குற்றச் செயல்கள் நடந்திருப்பதற்கான கூறுகள் எதுவும் இல்லை என்பது கண்டு பிடிக்கப்பட்ட பின்னர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இம்முடிவை எடுத்திருப்பதாக, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்ஏசிசி கூறியது.
“கல்வி அமைச்சின் கீழான 1பெஸ்தாரிநெட் திட்ட அமலாக்கத்தில் சம்பந்தப்பட்டுள்ள எந்த தரப்பும் குற்றச்சாட்டை எதிர்நோக்காது என்ற உத்தரவை அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமிருந்து எம்ஏசிசி பெற்றிருக்கின்றது.
“தனது பரிந்துரைகளோடு சேர்த்து, தனது விசாரணையின் கண்டுபிடிப்புகள் குறித்த முழு அறிக்கையை கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறும் எம்ஏசிசிக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளனர்” என்று
கூறப்பட்டுள்ளது.
1பெஸ்தாரிநெட் திட்டத்தில் லஞ்ச ஊழல், முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்திருப்பதாக புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓய்டிஎல் கம்யூனிகேஷன் நிறுவனம் மீதான ஒரு விசாரணையை எம்ஏசிசி கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி இருந்தது.
தனது விசாரணையின் ஓர் அங்கமாக ஓர் அரசாங்க அலுவலகம் உட்பட கோலாலம்பூரில் உள்ள ஓய்டிஎல் கம்யூனிகேஷனின் அலுவலகத்திலும் எம்ஏசிசி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சர்ச்சைக்குறிய 1பெஸ்தாரிநெட் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டில், அப்போது கல்வி அமைச்சராக இருந்த டான் ஸ்ரீ முஹிடின் யாசினினால் தொடங்கப்பட்டிருந்தது. அத்திட்டம் ஓய்டிஎல் கம்யூனிகேஷனிடம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், ஒய்டிஎல் கம்யூனிகேஷனின் குத்தகையைத் தொடரப் போவதில்லை என்று, முஹிடினுக்குப் பின்னர் கல்வி அமைச்சராக இருந்த மஸ்லி மாலேக் கடந்த 2019ஆம் ஆண்டில் முடிவு செய்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *