கூட்டணி கட்சிகளிடம் பதில் இல்லை! காத்திருக்கிறேன்! – தக்கியுதீன் ஹசான்
- Shan Siva
- 09 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 9: பெரிகாத்தான் நேஷனல் (PN) உச்ச மன்றக் கூட்டத்திற்கான தேதி நிர்ணயிப்பது தொடர்பாக, கூட்டணியைச் சேர்ந்த சில கட்சித் தலைவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை என்று PN துணை பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவித்தார்.
முகைதீன் யாசின் PN தலைவர் பதவியிலிருந்து விலகியதை அதிகாரப்பூர்வமாக
உறுதிப்படுத்தவும், அவருக்குப் பதிலாக புதிய தலைவரை
நியமிக்கவும், PN உச்ச மன்றம் கூட வேண்டும் என்றால்,
கூட்டணியின் நான்கு உறுப்புக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே
தேதியில் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலை உள்ளது என்று தக்கியுதீன் கூறினார்.
இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை.
நான்கு உறுப்புக் கட்சித் தலைவர்களின் ஒற்றுமையான முடிவைப் பொறுத்தே இது அமையும்.
அதற்காக ஏற்கனவே அவர்களிடம் தேதி குறித்து உடன்பாடு எட்டுமாறு கேட்டுள்ளதாக
தக்கியுதீன் தெரிவித்தார்.
ஆனால் சிலர் இன்னும் பதிலளிக்கவில்லை
என்று அவர் தெரிவித்தார்.
பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின்,
ரமலான் மாதம் தொடங்கும் காலப்பகுதியில் நோன்பு திறக்கும்
நேரத்தில் (இப்தார்) இந்தக் கூட்டத்தை நடத்தலாம் என்று பரிந்துரைத்ததாகவும் தக்கியுதீன்
கூறினார்.
எனினும், நான்கு
கட்சித் தலைவர்களும் இணைந்து எடுக்கும் முடிவுக்காக தாம் இன்னும் காத்திருப்பதாக
முகைதீன் கூறினார். கூட்டம் நடைபெறும் முன், கூட்டணியின்
நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கிடையேயான பிரச்சினைகளை சமரசமாகத்
தீர்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்,
என்று அவர் கூறினார்.
PN உச்ச மன்றக் கூட்டத்திற்கான
அழைப்பிதழ்கள், முகைதீன் உட்பட நான்கு உறுப்புக் கட்சித்
தலைவர்களுக்கும் பிப்ரவரி 3 அன்று அனுப்பப்பட்டதாக அவர்
தெரிவித்தார்.
முன்னதாக, ஜனவரி
29 அன்று PN உச்ச
மன்றம் கூட இருந்தது. ஆனால், கூட்டணித் தலைவர் பதவியை விலக்கிக்
கொண்டதால். முகைதீன் இனி உச்ச தலைமைக்குழு உறுப்பினர் அல்ல எனக் கூறி அவருக்கு
அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தக்கியுதீன் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மற்ற மூன்று கட்சித்
தலைவர்களுடன் “முன்-உச்ச மன்றக்” (pre-council) கூட்டம்
நடத்த வேண்டும் என்று முகைதீன் கேட்டுக் கொண்டதையடுத்து, அந்தக்
கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஜனவரி 1 அன்று
முகைதீன் தலைவர் பதவியிலிருந்து விலகியதிலிருந்து, PN தலைவர்
பதவி காலியாகவே உள்ளது. அந்தப் பதவியை PAS கோரியுள்ளதாக
கூறப்படுகிறது. ஆனால், அதன் “கடுமையான” (hardline) அணுகுமுறை காரணமாக, கெராக்கான்
மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) PAS கூட்டணியை
வழிநடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



