கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!

- Muthu Kumar
- 17 Jan, 2025
கூச்சிங், ஜன. 17-
சரவாக் ஒளிபரப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பிலான தங்களின் விசாரணைக்கு உதவுவதற்காக போலீசார், ஒரு முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்திருக்கின்றனர்.
அந்த நால்வரும் 53 முதல் 71 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் புக்கிட் அமான் கள்ளப் பணப் பரிமாற்ற குற்றச் செயல் ஒழிப்பு விசாரணைக் குழுவினால் சரவாக், கூச்சிங்கில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் உசேன் தெரிவித்தார்.
முதலில் தமது குழுவினர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலையில், 53 வயதுடைய ஓர் ஆடவரையும் 62 வயதுடைய ஒரு பெண்ணையும் கைது செய்ததாகவும் கூறிய அவர், அவர்களில் ஒருவர் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் என்றார்.
“அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்போது நாங்கள் அந்நிறுவனத்தின் 32 ஆவணங்களையும் கைப்பற்றினோம்” என்று ரஸாருடின் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
எஞ்சிய இருவரில் ஒருவர் 67 வயதுடையவர். அவர் சரவாக்கில் மேயராக பணியாற்றியவர். மற்றொருவர் அந்த ஒளிபரப்பு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியாவார்.அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர் என்று ரஸாருடின் கூறினார்.
இக்கள்ளப் பணப் பரிமாற்ற சம்பவம் மீதான ஒரு விசாரணை தொடர்பில் சரவாக்கிலும் பினாங்கிலும் 26 முதல் 65 வயதுக்குட்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை அவர் கூறியிருந்தார்.இச்சம்பவம் தொடர்பில் போலீசார் பல ஆவணங்களையும் பல வாகனங்களையும் கைப்பற்றியதாகவும் ஒரு கோடியே 70 லட்சம் வெள்ளிக்கும் மேல் வைக்கப்பட்டிருந்த சில வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *