வீட்டுக் காவல் தொடர்பான வழக்கு:தடை உத்தரவுக்கு நஜிப் எதிர்ப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 8-

தம்மை வீட்டுக் காவலில் வைப்பதற்கான அரச உத்தரவை அமல்படுத்தக்கோரி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் அது குறித்து பகிரங்கமாக விவாதிப்பதற்குத் தடை விதிக்கக்கோரி அரசாங்கத் தரப்பில் விண்ணப்பமொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால், அதற்கு நஜிப் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அந்த விண்ணப்பத்தை எதிர்த்து அபிடவிட் மனுவொன்றை நஜிப் நேற்று தாக்கல் செய்தார். தடை உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அந்த மனுவில் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாய்ப்பூட்டு உத்தரவு தேவையற்ற ஒன்று. அந்த உத்தரவு இல்லாதிருந்தால், தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை என்று அவர் கூறினார். அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாட்சிமை தங்கிய பேரரசருக்கு எதிராகவோ அரச பீடத்திற்கு எதிராகவோ இதுவரை எவரும் தேசநிந்தனைக்குரிய வகையில் பேசவில்லை என்று நஜிப் சுட்டிக் காட்டினார்.
எந்தவொரு நபர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, அரச பீடத்தித்திற்கு உடனடியாக ஆபத்தோ மிரட்டலோ ஏற்படும் சாத்தியம் இல்லை என்றும் தமது மனுவில் நஜிப் விவரித்துள்ளார்.

தம்மை வீட்டுக் காவலில் வைக்கக்கோரும் அரச உத்தரவை முன்னாள் பேரரசர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா பிறப்பித்திருப்பதால் அதனை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் நஜிப். அந்த வழக்கில் நஜிப்புக்கு ஆதரவாக கடந்த மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நஜிப்புக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் அரச உத்தரவு பற்றி விவாதிக்க பொதுமக்களுக்குத் தடை விதிக்க அரசாங்கம் முயன்று வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *