தீ விபத்து நடைபெற்ற ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அரசின் உதவி-சிவநேசன்!

top-news
FREE WEBSITE AD

டிகே.மூர்த்தி

சித்தியவான், ஜன.8-

கடந்த 6ஆம்  தேதி 12.00 மணியளவில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில், பள்ளியின் பொருள்கள் சேமிப்பு அறையில் அமைக்கப்பட்டிருக்கும், மின்னோட்டத்தை தொடங்கவும் நிறுத்தவும் செய்யும் மையத்தில் ஏற்பட்ட தீயில் சிற்றுண்டிச் சாலை, மூன்று வகுப்பறைகள் மற்றும் கணினி அறை உள்ளிட்டவை பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன என்று இந்திய சமூக நல விவகாரத்திற்குப் பொறுப்பு வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் தெரிவித்தார்.

மேலும், நடந்த இச்சம்பவம் குறித்து மாநில முதல்வர் டத்தோஸ்ரீ சராணி முகமது மற்றும் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ ஆகியோரிடம் தாம் தொடர்புகொண்டு பேசியபோது, மாநில அரசின் சார்பிலும், கல்வி அமைச்சின் சார்பிலும் தீர்வு காண்பதில் எந்தவொரு சுணக்கமும் ஏற்படாது என்று அவ்விருவரும் உறுதியாக இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில், தீயில் பாதிக்கப்பட்ட இப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் மற்றொரு ஒற்றை மாடிக் கட்டடப்பணி நிறைவு பெற்றுள்ளது. ஆனால், அந்த கட்டடத்திற்கு மஞ்சோங் மாவட்ட ஊராட்சி மன்றம் கட்டடப் பாதுகாப்பு சான்றிதழ் வழங்காமல் உள்ளது. எனினும் அந்த விசயம் குறித்து மாநிலத்தில் தாம் கலந்து பேசியதும் தீர்வு காணக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் விவரித்தார்.

எந்த சூழ்நிலையிலும், மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்படக் கூடாது என்பதில் பேரா மாநில மந்திரி பெசாரும், துணைக் கல்வி அமைச்சரும் மற்றும் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே கூ ஹாம், பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினர் வோங் மே இங், மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் ம.அர்ஜுனன் ஆகியோரின் ஆதரவு பெருமை அளிக்கிறது என்றார். வாரியக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என இவர்கள் அனைவரும் நல்ல புரிந்துணர்வுடனும் நட்புடனும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில், இப்பள்ளி தன் சொந்த நிலத்தில் அடையாளமாக வீற்றுள்ள முதல் தமிழ்ப்பள்ளியாகும் என அவர் எடுத்துரைத்தார்.இந்த நிலம் சீனர் ஒருவருக்கு சொந்தமான நிலம் என்றாலும், பள்ளிக்கு எந்தவிதமான இடையூறுகளும் அவர் கொடுக்கவில்லை. இறுதியில் பள்ளி அமைந்துள்ள நிலத்தை பள்ளி வாரியக்குழுவுக்கே வெ.300,000 விற்றுவிட முன்வந்துள்ளார்.

அதன் விளைவாக, பெருவாஸ் நாடாளுமன்றம் வெ.70,000, பத்து காஜா நாடாளுமன்றம் வெ.100,000, பந்தாய் ரெமிஸ் சட்டமன்றம் வெ.10,000, ஆட்சிக்குழு சார்பில் சிவநேசன் வெ.20,000, தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் வெ.10,000, பேரா மாநில இந்திய மாணவர் கல்வி வளர்ச்சி அமைப்பு வெ.15,000, மற்றும் தன்னார்வத்துடன் 107 பேர் தலா வெ.1,000 என்று மொத்தம் வெ.107,000 என மொத்தம் 780 பேரிடம் இருந்து வெ.3,21,719.22 வசூலிக்கப்பட்டது என்றும் சிவநேசன் சுட்டிக்காட்டினார்.

தவிர, தீ விபத்தில் மாணவர்கள் பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளையும் இழக்க நேரிட்டது. ஆனால், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு தலா வெ.200 நிதி உதவி வழங்கிட முன்வந்துள்ள நிலையில், பெற்றோர்களின் சுமையும் குறைக்கப்பட்டது.

கடந்த 1938 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 32 மாணவர்கள், 13 ஆசிரியர்கள், 1 அலுவலகப் பணியாளர், 2 பேர் தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் 2 பாதுகாவலர்கள் இருக்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *