பச்சரிசி இறக்குமதி விவகாரம் பெர்னாஸின் கூற்றுக்கு அரசாங்க குழுத் தலைவர் மறுப்பு!

- Muthu Kumar
- 05 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 5-
பாகிஸ்தானிலிருந்து பச்சரிசியை இறக்குமதி செய்யும் ஒரு பரிந்துரை தொடர்பில் பேச்சுக்கள் எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை என்ற பாடிபெராஸ் நேஷனல் நிறுவனத்தின் (பெர்னாஸ்) கூற்றை, உணவு விலைகள் மீதான அரசாங்கக் குழுத் தலைவர் மறுத்திருக்கின்றார்.
பேச்சுக்கள் இன்னும் நடத்தப்படவில்லை என்ற “தவறான" செய்தியை பெர்னாஸ் ஏன் வெளியிட்டது என்று சைட் அபு உசேன் ஹஃபிஸ் கேள்வி எழுப்பினார்.அரிசி இறக்குமதி விவகாரம் தொடர்பில் தகவல் சாதனங்களில் அறிக்கைகளை வெளியிடும் எந்தவொரு தரப்பினரும் தங்களின் தகவல்கள் உண்மையானவையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று. பெர்னாஸ் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் எச்சரித்திருந்தது.
தேசிய அரிசி சந்தையின் நிலைத் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயனீட்டாளர்கள் மத்தியில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்க, பெர்னாஸ் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்ட பின்னரே கருத்துகள் வெளியிடப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பெர்னாஸ் கூறியிருந்தது.
விநியோகம் மற்றும் விலை தொடர்பிலான பிரச்சினைகளைக் கையாள, பாகிஸ்தானிலிருந்து பச்சரிசியை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, சைட் உசேன் கூறியதாக கூறப்பட்ட பின்னர் பெர்னாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தது.இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து கூடுதலாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் பச்சரிசியை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் ஈடுபாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவித்திருந்ததாக, சைட் உசேன் நேற்று சனிக்கிழமை கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16 தொடங்கி 19 ஆம் தேதி வரையில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அன்வார், பாகிஸ்தானிய அரிசி ஏற்றுமதியாளர்கள் 28 பேரை சந்தித்தார் என்றும் அப்போது, உலக சந்தையைக் காட்டிலும் குறைந்த விலையில் கூடுதலாக ஒரு லட்சம் டன் பச்சரிசியை மலேசியாவுக்கு விநியோகிக்க தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் சைட் உசேன் கூறினார்.
"எனினும், பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய பின்னர், பாகிஸ்தானிலிருந்து விலை குறைவான பச்சரிசியை இறக்குமதி செய்ய தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று, பெர்னாஸ் பிரதிநிதிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
"பெர்னாஸ் ஏன் தவறான தகவல்களை பரப்பி வருகிறது ?. மிகவும் விலை குறைவான பாகிஸ்தானிய பச்சரிசியை இறக்குமதி செய்வதை தடுக்கிறது?. மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பெர்னாஸ்சுக்கு தெரியவில்லையா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *