சொஸ்மா சட்டம் மறுஆய்வு அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி தகவல்!

- Muthu Kumar
- 15 Feb, 2025
புத்ராஜெயா, பிப். 15-
சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு சிறப்புக் குற்றங்கள்(சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தை மறுஆய்வு செய்யும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி பாட்ஸில் நேற்று தெரிவித்தார்.
அச்சட்டத்தை மேலும் செம்மைப்படுத்துவற்கு ஏதுவாக அதன் பல்வேறு அம்சங்கள் நுண்ணாய்வு செய்யப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாமி குறிப்பிட்டார்.
இந்த மறுஆய்வு தொடர்பான மேல்விவரங்களை உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மக்களவையில் விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். அச்சட்டத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கம் முடிவெடுத்ததற்கு என்ன காரணம் என வினவப்பட்டதற்கு, சட்டங்களை அவ்வப்போது அரசாங்கம் மறுஆய்வு செய்வது வழக்கமான ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
நேற்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஃபாமி கூறினார். சொஸ்மா சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதற்கு உள்துறை அமைச்சு பொறுப்பேற்க வேண்டிய நேரம்
வந்து விட்டது என்று பக்காத்தான் ஹராப்பானின் ஐந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் வலியுறுத்தியிருந்தனர்.
ஒங் கியான் மிங், காலிட் சமாட், கஸ்தூரி பட்டு, நூர் அமின் அமாட், மாரியா சின் அப்துல்லா ஆகிய அந்த ஐவரும் சொஸ்மா சட்டம் அவசியமா என்பதை அரசாங்கம் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.சொஸ்மா கைதிகள் மோசமாக நடத்தப்படுவதாகவும் அவர்களின் நீதிமன்ற விசாரணை தாமதப்படுத்தப்பட்டு வருகிறது எனவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பதில் கடந்த 2012ஆம் ஆண்டு நஜிப் அரசாங்கத்தினால் சொஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *