இந்தியா இழந்தது எத்தனை விமானங்கள்- ஜெய்சங்கரிடம் விளக்கம் கேட்ட ராகுல் காந்தி!

- Muthu Kumar
- 20 May, 2025
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அது தொடர்பாக பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய காணொளியை இணைத்து, கடந்த 17-ம் தேதி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.
அதில், 'நமது தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்தது ஒரு குற்றம். இந்திய அரசு இதைச் செய்ததாக வெளியுறவுத் துறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. யார் இதை அங்கீகரித்தார்கள்? இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?' என கேள்வி எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் எவ்வித பதிலும் அளிக்காத நிலையில், இந்த விவகாரத்தை ராகுல் காந்தி இன்று மீண்டும் எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'ஜெய்சங்கரின் மவுனம், அவர் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல - அது மிகவும் மோசமானது. எனவே நான் மீண்டும் கேட்கிறேன்: பாகிஸ்தானுக்குத் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்? இது ஒரு தவறு அல்ல. இது ஒரு குற்றம். மேலும் தேசம் உண்மையை அறியத் தகுதியானது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தியின் கூற்றை மறுத்த வெளியுறவு அமைச்சகம், 'ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை எச்சரித்தோம். இது ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு ஆரம்ப கட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடங்குவதற்கு முன்பு என தவறாக சித்தரிக்கப்படுகிறது. முற்றிலும் தவறான விளக்கத்தால் உண்மை மறைக்கப்படுகிறது' என்று தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வெளியுறவுத்துறையின் மவுனம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கப்பட்டது? இந்த செயல்பாட்டு ரகசியத்தை மீறுவதற்கு யார் அனுமதி அளித்தனர்? இதன் காரணமாக நமது ஆயுதப்படைகள் என்ன விளைவுகளை எதிர்கொண்டன?
இது ஒரு வழக்கமான முடிவு அல்ல. இது ஒரு ராஜதந்திர சம்பிரதாயம் அல்ல. எதிரிக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டதால் இந்திய விமானங்கள் தொலைந்து போயிருந்தால் - அது ஒரு தவறு அல்ல. அது ஒரு துரோகம். நாடு உண்மையை அறிய தகுதியானது. நாடாளுமன்றம் பொறுப்புக்கூறத் தகுதியானது. மேலும் பொறுப்பானவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.' என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தானுக்குத் தகவல் அளித்ததாக ஜெய்சங்கர் கூறியதாகக் கூறப்படும் கூற்றுகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) முன்னர் மறுத்துள்ளது. எக்ஸ் பதிவு ஒன்றில், அமைச்சர் அத்தகைய எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அவர் தவறாக மேற்கோள் காட்டப்படுகிறார் என்றும் PIB இன் உண்மை சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *