வெ 830,000 இழப்பீடு செலுத்தினார் பாஸ் எம்.பி!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ் டவுன், ஜன. 24-

ஜசெகவின் மூத்த தலைவர்களான டான்ஸ்ரீ லிம் கிட் சியாங், லிம் குவான் எங், திரேசா கோக் ஆகியோரை அவதூறு செய்த வழக்கில் குற்றவாளி என பினாங்கு உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்தூரா முகமது அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

அதே வேளையில், அம்மூவருக்கும் வட்டியுடன் எட்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் வெள்ளியை இழப்பீடாகவும் செலவுத்தொகையாகவும் வழங்க வேண்டுமெனும் அந்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் அவர் கட்டுப்பட்டார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவு தெரியும் வரையில் அதற்கான காசோலையை அம்மூவரின் வழக்கறிஞரான டத்தோ சங்கர நாயரிடம் ஒப்படைக்க பாஸ் கட்சியைச் சேர்ந்தவரான சித்தி மஸ்தூரா இணங்கினார்.

சித்தி மஸ்தூராவிடமிருந்து கிடைக்கப் பெற்ற வட்டி உட்பட 830,034. 75 வெள்ளிக்கான காசோலை தமது சட்ட நிறுவனத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டதை சங்கர நாயர் உறுதிப்படுத்தினார்.இந்நிலையில், பிரதிவாதியான சித்தி மஸ்தூராவுக்குத் தேவைப்படும் உத்தரவாதங்களை வெளியிட்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் விசாரணைக்காக நாங்கள் காத்திருக்கப் போகிறோம் என்றார் அவர்.

பினாங்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற காணொளி (ஸூம்) வாயிலான கலந்தாய்வின்போது சங்கர நாயர் இதனைத் தெரிவித்தார்.அச்சந்திப்பில் சித்தி மஸ்தூராவின் வழக்கறிஞர் யூஸ்ஃபரிசால் யூசோப்பும் கலந்து கொண்டார்.முன்னதாக நேற்று காலையில், பினாங்கு உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ குவாய் சியூ சூனின் அலுவலக அறையில் வாதிகளின் வழக்கறிஞர்களும் பிரதிவாதியின் வழக்கறிஞர்களும் சமரச உடன்பாடு கண்டனர்.

சங்கர நாயரின் சட்ட நிறுவனத்திடம் சித்தி மஸ்தூரா இழப்பீட்டுத் தொகையை ஒப்படைத்துவிட்டார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தின் முடிவு தெரியும் வரையில், அப்பணம் அரசு வழக்கறிஞர்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையை விதித்துள்ளோம் என்று யூஸ்ஃபரிசால் குறிப்பிட்டார்.சித்தி மஸ்தூராவின் மேல்முறையீடு மார்ச் 13ஆம் தேதியன்று செவிமடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிட் சியாங், குவான் எங், திரேசா கோக் ஆகியோரை காலஞ்சென்ற மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சின் பெங், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ ஆகியோருடன் சித்தி மஸ்தூரா தொடர்புபடுத்திப் பேசியது அவதூறாகும் என்று கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி பினாங்கு உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ குவாய் சியூ சூன் தீர்ப்பளித்திருந்தார்.

ஜசெகவின் மூத்த தலைவரான கிட் சியாங்கிற்கு மூன்று லட்சம் வெள்ளியும் கட்சித் தலைவர் குவான் எங்கிற்கு இரண்டு லட்சம் வெள்ளியும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினரான திரேசாவுக்கு இரண்டு லட்சம் வெள்ளியும் இழப்பீடாக வழங்கும்படியும் சித்தி மஸ்தூராவுக்கு அவர் உத்தரவிட்டார். அத்துடன், வாதிகளான அம்மூவருக்கும் செலவுத்தொகையாக தலா 25,000 வெள்ளி வழங்கும்படியும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

கெமமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சித்தி மஸ்தூரா அவ்வாறு அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்டது. அதன் தொடர்பில், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதியன்று அவர் மீது அம்மூவரும் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *