பேராக் சுல்தானுடன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் சந்திப்பு!
- THINAGAREN SANGGAREN
- 16 Mar, 2026
மார்ச் 16 –
மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பேராக் மாநில மேன்மை தங்கிய சுல்தான் நஸ்ரின் முயிசுடின் ஷா இப்னி அல்மர்ஹும் சுல்தான் அஸ்லான் முஹிபுடின் ஷா அல்-மக்ஃபூர்-லா அவர்களை சந்தித்து பேராக் மாநிலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பெர்கேசோ (PERKESO) மறுவாழ்வு மையத்தின் தற்போதைய கட்டுமானப் பணிகள் குறித்தான விளக்கத்தை அளித்தார்.
இந்த மறுவாழ்வு மையத்திற்குப் பொருத்தமான பெயர் சூட்டுவது குறித்தும், இம்மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பதற்காக, சுல்தான் அவர்கள் திருவுள்ளம் கனிந்து வருகை தரும் திகதி குறித்தும் பேராக் சுல்தானுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பயனளிக்கும் இத்தகைய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மீது சுல்தான் அவர்கள் காட்டிய ஆழ்ந்த அக்கறைக்கும், தமக்குச் சந்திப்பு வழங்கியமைக்கும் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
மக்களின் நல்வாழ்வையும் நாட்டின் சுபிட்சத்தையும் கருத்தில் கொண்டு வகுக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் செம்மையாகச் செயல்படுத்தப்படுவதற்கு, சுல்தான் அவர்கள் வழங்கிய ஆலோசனைகளும் மேலான கருத்துகளும் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, பேராக் மாநில இஸ்லாமிய சமய - மலாய் கலாச்சார மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முகமட் அனுவார் பின் சைனி, மனிதவள அமைச்சின் துணைச் செயலாளர் (கொள்கை மற்றும் சர்வதேசம்) டாக்டர் ஹாஜி முகமட் ஷாஹரின் பின் உமார், பெர்கேசோ வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமல், பெர்கேசோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் பின் அஜிஸ் முகமட், பெர்கேசோ மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஹபீஸ் பின் ஹுசைன் ஆகியோர் உடனிருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



