செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் 42 மாடி அடுக்ககத்தை நிர்மாணிப்பதில் எதிர்ப்பு!

- Muthu Kumar
- 22 Dec, 2024
கோலாலம்பூர், டிச.22-
செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் 42 மாடிகளைக் கொண்ட ஆடம்பர அடுக்ககத்தை நிர்மாணிக்கும் திட்டத்திற்குப் பள்ளி மேலாளர் வாரியம் எதிர்ப்புத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. இந்த எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதற்கான முக்கிய நோக்கம் இப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு ஆகும் என்று பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் வீ.குமார் தெரிவித்தார்.
இந்த நிர்மாணிப்புத் திட்டத்தால் பள்ளி மாணவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு பாதிக்கப்படுவது மட்டுமின்றி ஆபத்தான நிலையில் இருக்கக்கூடிய சாத்தியமும் உண்டாகும். உங்கள் தகவலுக்கு இதே பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி 27 மாடிகளைக் கொண்ட ஆடம்பர அடுக்கக நிர்மாணிப்புத் திட்டத்திற்கும் எங்களின் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அத்திட்டம் 42 மாடிகள் கொண்ட ஆடம்பர அடுக்ககத் திட்டமாகத் திருத்தப்பட்டுள்ளது. இந்த நிலை எங்களுக்கு வருத்தமளிப்பதற்குக் காரணம் இந்த நிர்மாணிப்புப் பகுதியிலிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் பள்ளி இருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் எப்படி அங்கீகாரம் வழங்கியது என்றே தெரியவில்லை.
கோலாலம்பூர் கட்டமைப்புத் திட்டம் 2040 "எல்லோருக்குமான நகரம்” என்ற மாநகர் மன்றத்தின் கருப்பொருளின் நோக்கத்திற்கு எதிராக இந்த கட்டமைப்பு உள்ளது. அதே சமயம், இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு யாரிடமிருந்தும் மாநகர் மன்றம் கருத்துகளைப் பெறவில்லை.
உண்மையில் இத்திட்டத்தைத் தொடர்வதற்கு முன்பு சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் கருத்துகளை மாநகர் மன்றம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளைத் தொடங்குவதற்கான திட்ட அங்கீகாரத்தையும் மேம்பாட்டாளர்கள் காட்டவில்லை, மாறாக இத்திட்டத்தைப் பற்றித் தெரியப்படுத்த கடந்த 10ஆம் தேதிதான் பள்ளி நிர்வாகத்திற்குக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ஒலித் தூய்மைக்கேடு பிரச்சினையும் தொடங் கிவிட்டன. மாநகர் மன்றத்திற்குத் தெரியாமல் இத்தகைய நடவடிக்கையை இவர்கள் எப்படி மேற்கொள்ள முடியும் என்பதில்' எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. கோலாலம்பூர் கட்டமைப்புத் திட்டம் 2040இன்படி அனைவருக்குமான நகரமாகும். அரசாங்க நிலத்திற்கு அருகிலுள்ள திறந்த வெளி இடத்தில் அரசாங்கத் தரப்பு, பொது அல்லது பசுமையான இடத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டும்.
இப்பகுதியைப் பள்ளியின் திடலாக்குவதற்கு மாநகர் மன்றத்திடம் நாங்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்தோம். இருந்த போதிலும் எங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இந்த சூழ்நிலையில் மலேசிய அரசாங்கத்தின் கொள்கைக்கான முன்னுரிமை புறக்கணிக்கப்படுகிறதா அல்லது மக்கள் குறிப்பாகப் பள்ளி மாணவர்களின் நல்வாழ்வைக் காட்டிலும் மேம்பாட்டாளர்களின் கொள்கைக்கு மட்டுமே மாநகர் மன்றம் முக்கியத்துவம் கொடுக்கிறதா?
இதில் மாநகர் மன்றமும் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும், காரணம் வாங்குபவர்கள் இல்லாதக் காரணத்தால் பெரும்பாலான சொகுசு வீடுகள் விற்கப்படாமல் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இத்திட்டம் கைவிடப்பட்டால் என்ன ஆகும்? இப்பகுதி போதைப்பித்தர்களின் இருப்பிடமாக அல்லது டிங்கிக் காய்ச்சல் பரவும் இடமாகத்தான் இருக்கும் என்று ஓர் அறிக்கையில் குமார் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பெற்றோர்கள், பள்ளி வாரியக் குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோர் இணைந்து இந்த ஆடம்பர அடுக்ககம் நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் பள்ளியின் முன்புறத்தில் நின்று ஆட்சேபம் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *