விஜய்க்கு ஆதரவாக போராட்டம்: சென்னை மெரினாவில் போலீஸ் குவிப்பு
- Surendran Sumdraraj
- 07 May, 2026
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இன்னும் பெறாத நிலையில், தவெக தலைவர் விஜய் சமீபத்தில் கவர்னர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். காங்கிரசின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உட்பட மொத்தம் 113 பேரின் பட்டியலை அவர் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், விஜய் முதல்மைச்சராக பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் “ஜல்லிக்கட்டு போராட்டம் போல மெரினாவில் மக்கள் கூடுவோம்” என்ற பதிவுகள் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மெரினா கடற்கரை, முக்கிய சாலைகள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



