நாடற்றவர்களின் நலன் காக்க 'அறம்'! - சரஸ்வதி கந்தசாமி !

top-news
FREE WEBSITE AD

(கு.தேவேந்திரன்)

கோலாலம்பூர், நவ. 25-

இந்நாட்டில் குடியுரிமையற்ற நாடற்றவர்களின் நலன் காக்கும் பணியில் 'அறம்' என்னும் பேரியக்கம் செயல்படும் என்று அதன் தோற்றுநரும் ஒற்றுமைத்துறை துணையமைச்சருமான செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.நேற்று அறம் அமைப்பின் அறிமுக விழா தலைநகர் ஜாலான் டூத்தாவிலுள்ள தேசிய பழஞ்சுவடி காப்பகமான ஆர்க்கிப் நெகாரா அரங்கத்தில் நடைபெற்றது.

அறம் என்னும் இந்த அமைப்பு ஓர் இயக்கமாகவோ அரசு சார்பற்ற இயக்கமாகவோ செயல்படும் என்று யாரும் கருத வேண்டாம். இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டிலேயே குடியுரிமையற்றவர்களாக இருப்பவர்களுக்கு அறம், அரணாக இருக்கும் என்று செனட்டர் சரஸ்வதி கூறினார்.இந்த நாட்டில் எண்ணற்ற மக்கள் குறிப்பாக இந்தியர்கள் குடியுரிமையற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்று பல்வேறு திட்டங்களை வகுத்தபின்னர் இந்த அறம் தொடங்கப்பட்டுள்ளது.




பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கம் ஒரே கிராமம், ஒரே தலைவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டபோது நானே முன்வந்து சிலாங்கூர், கோலசிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள மேரி தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம் இந்த இரண்டு தோட்டங்களையும் தத்தெடுத்து அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றேன்.தோட்டத்திலிருந்து பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள பட்டணத்திற்கு சென்றடைய தோட்ட மக்களும் அவர்களின் பிள்ளைகளும் சிரமப்பட்டு வருகிறார்கள். நான் பிறந்த பினாங்கு ஜோர்ஜ் டவுனையும் வாழ்ந்து வருகின்ற கோலாலம்பூரையும் என்னால் தத்தெடுத்துச் செயல்படுத்த முடியும்.

ஆனால் வறுமையில் வாழ்கின்ற அந்த தோட்ட மக்களின் நல்வாழ்வுக்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையினால்தான் அந்த இரண்டு தோட்டங்களையும் தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகின்றேன்.இன்றைய அறம் தொடக்க விழாவுக்கு முன்பாக நடந்த கலந்துரையாடலில் தமிழாசிரியர் திருமதி வாணிஸ்ரீயும் வழக்கறிஞர் திருமதி திலகாவும் எடுத்துரைத்த கருத்துகள் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகளாகும்.

பள்ளிக்குச் செல்லாமல் கல்வியை இழந்து நிற்கும் சிறார்களையும் குடியுரிமையின்றி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தது பற்றியும் அந்த இரண்டு நிபுணர்களும் பேசிய கருத்துகளுக்கு நாம் விடைகாண வேண்டும்.அறம் எனும் இந்த அமைப்பு நாடற்றவர்களாக இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அரணாக விளங்கும் என்பதில் எந்த ஓர் ஐயமுமில்லை. இவ்வாறு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கூறினார்.

நேற்றைய அறிமுக விழாவில் சிஸ்வா எனப்படும் தன்னார்வல அறவாரியத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி வோங் கின் லுன், துன் ரசாக் அறவாரியத்தின் செயலாளர் தெங்கு ஹரிஸ் அஸிஸ், தேசிய பழஞ்சுவடி காப்பகமான ஆர்க்கிட் நெகாராவின் இயக்குநர் திருமதி கௌரி ரெங்கையா, துணை இயக்குநர் ஸுல்கிப்ளி ஹஸிம், தன்னார்வல அறவாரியத்தின் வாரிய அறங்காவலர் டாக்டர் சுப்பிரமணியம் கோவிந்தன், சமிந்தா எனப்படும் மலேசிய சிறு- நடுத்தர தொழில் அமைப்பின் தலைவர் டத்தோ வில்லியம் வோங், சுங்கைபூலோ கெஅடிலான் தொகுதி தலைவர் ஆர்.சிவராசா உள்ளிட்ட இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இயக்கப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *