டிரம்பின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ஈரான்!

- Muthu Kumar
- 18 Jun, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் 'உயர்ந்த தலைவர்' எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது தங்களுக்கு துல்லியமாகத் தெரியும் என்றும், அவர் எளிதில் குறிவைக்கப்படக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயத்துல்லா கமேனி, அப்பாவி மக்கள் மீதோ அல்லது அமெரிக்க வீரர்களின் மீதோ தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லையேல் அமெரிக்காவின் பொறுமைக்கு ஒரு எல்லையுண்டு என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத்தின் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ தாக்குதலில் ஈரானின் அணுசக்தி மையங்கள் குண்டுவீசப்பட்டதற்கு பிறகு, ஈரான் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி வருகிறது. குடியிருப்பு பகுதிகளையும், ராணுவ தளங்களையும் குறிவைத்து தாக்கும் இந்த பதற்றமான சூழலில்தான், டிரம்ப்பின் இந்த நேரடி எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில், ‘உயர்ந்த தலைவர்’ என்று அழைக்கப்படும் நபர் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது எங்களுக்கு மிக தெளிவாக தெரியும். அவர் எளிதில் குறிவைக்கப்படக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இப்போதைக்கு அவர் பாதுகாப்பாக இருக்கிறார். அவரை கொல்லும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் அதே நேரத்தில், பொதுமக்கள் மீதோ, அமெரிக்க வீரர்கள் மீதோ ஏவுகணைகள் பாய்வதை நிறுத்த வேண்டும். எங்கள் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு என்று எச்சரிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் டிரம்ப் மற்றொரு அறிக்கையில் “ஈரானின் வான்பகுதி இப்போது முழுமையாக எங்கள் வசம்கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரானிடம் சிறந்த வான்வழி கண்காணிப்பு கருவிகளும், பிற பாதுகாப்பு சாதனங்களும் ஏராளமாக இருந்தன; ஆனால், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட சாதனங்களுக்கு அவை ஈடாகாது. எங்களை விட யாரும் சிறப்பாக செய்வதில்லை,” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் எழுதியுள்ளார்.
மேலும் ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, பலமுறை கமேனியுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைக்காக அணுகியுள்ளோம், ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் ஈரானை தான் அணுகவில்லை என்பதையும் டிரம்ப் தெளிவுபடுத்தினார்.டிரம்ப் ஒருபக்கம் எச்சரிக்கை விடுத்தாலும் இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை தொடர்ந்து ஏவி வரும் ஈரான், இஸ்ரேலின் மொசாட் தலைமையகத்தையும், அந்நாட்டின் பிற உளவுத்துறை பிரிவுகளையும் குண்டுவீசி தாக்கியதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், தங்கள் உளவுத்துறை சொத்துகள் குறிவைக்கப்பட்டதா என்பது குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், ஒரு பேருந்து நிறுத்தத்தில் தாக்குதல் நடந்ததை மட்டும் ஒப்புக்கொண்டது.அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலை கண்டுகொள்ளாமல், ஈரான் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கி வருவதால் விரைவில் அமெரிக்கா நேரடியாக இந்த போரில் களமிறங்கும் என கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *