மலேசியாவுக்கு ஈரான் சலுகை! - அன்வார் பாராட்டு
- Shan Siva
- 08 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 8: மலேசிய எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதித்ததற்காக ஈரானுக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற கோலாலம்பூர்-அங்காரா உரையாடல் 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக, மலேசியாவிற்கான ஈரான் தூதர் வாலியோல்லா மொஹம்மதி நஸ்ரபாடியுடனான சந்திப்பின்போது, ஈரானுக்கு தனது நாட்டின் பாராட்டைத் தெரிவித்ததாக அன்வர் கூறினார்.
எரிசக்தி விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைப்பதற்கும், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைய் ஆதரிப்பதற்கும் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது," என்று அன்வர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
முன்னதாக , ஹோர்முஸ் ஜலசந்தியில் தற்போது சிக்கியுள்ள மேலும் ஆறு மலேசிய கப்பல்கள் படிப்படியாக அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று வாலியோல்லா கூறினார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள ஏழு மலேசிய கப்பல்களில் ஒன்றுக்கு பாதுகாப்பான வழி அனுமதிக்கப்பட்டு, அது தற்போது தனது இறுதி இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர்வதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் 26 அன்று அன்வருக்கும் ஈரானிய அதிபர் மசூத் பெஷெஷ்கியனுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஏழு கப்பல்களும் தங்கள் பயணங்களைத் தொடர மலேசியா அனுமதி பெற்றது.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான முக்கிய நீர்வழியை ஈரான் கிட்டத்தட்ட மூடிவிட்டது.
இந்த இடையூறுகள் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்து, எண்ணெய் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தி, பரந்த பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் ஈரான், "விரோதமற்ற" நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



