யூனிவர்சல் ஸ்டூடியோஸ் டிக்கெட்டுகள் வாங்கிய மோசடிப் பேர்வழி!

- Muthu Kumar
- 05 Jan, 2025
சிங்கப்பூர், ஜன. 5-
கடன் அட்டை மோசடி செய்து 65,000 டாலர் பெறுமானமுள்ள யூனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூர் டிக்கெட்டுகள் வாங்கிய மோசடி ஆடவருக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) நான்கு மாத நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நய் ஜின் கின் என்ற அந்த 35 வயது மலேசிய ஆடவர் 17 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் 46 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில்கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகர்களை வெளிநாட்டவர் பலர் குறிவைத்து கடன் அட்டை மோசடிகள் செய்வதாக காவல்துறை கூறிவரும் நிலையில், திரு நய்க்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது நினைவுகூரத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு நய்யை மின்னிலக்க நாணயம் வாங்கும், விற்கும் டெலிகிராம் குழுவில் அவரது நண்பர் இணைத்தார்.
பின்னர் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டா ஷெங் என்பவர் நய்யை தொடர்புகொண்டு யூனிவர்சல் ஸ்டூடியோஸ் டிக்கெட்டுகளை தமது நிறுவனம் வாங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டதாக அறியப்படுகிறது. வேலையில்லாமல் இருந்த திரு நய் அதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வேறொரு டெலிகிராம் குழுவில் சேர்க்கப்பட்டார்.
இதன் தொடர்பில் 2024 செப்டம்பர் மாதம் நய் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு யுனிவர்சல் ஸ்டூடியோஸ் டிக்கெட்டுகள் வாங்க பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார்.
யூனிவர்சல் ஸ்டுடியோஸ் சென்றவுடன் அவர் டெலிகிராம் குழுவிடம் தமது வருகை பற்றித் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நய்க்கு 10 மின்னிலக்க குறியீடு தரப்படும். அத்துடன் வூவ் என்பவரைத் தொடர்பு கொள்ளும்படி அவரிடம் சொல்லப்படும்.அந்த நபர் நய் எத்தனை டிக்கெட்டுகள் வாங்க வேண்டும் எனக் கூறுவார், கூடவே அவருடைய கைப்பேசியின் ஆப்பிள் செயலிக்கு மின்னிலக்க வடிவிலான கடன் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
அவற்றைக் கொண்டு அவர் கேட்கப்படும் எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளை வாங்குவார். பின்னர், கைப்பட டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டதும் நய் டா ஷெங்கிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வார். இதன்மூலம், நய் மலேசிய ரிங்கிட் 6,000 பெற்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *