70 அடி உயர மெஸ்சி சிலை அகற்றம்: மேற்கு வங்காள அரசு நடவடிக்கை
- Surendran Sumdraraj
- 02 Jun, 2026
கொல்கத்தா, ஜூன் 2-
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த 70 அடி உயர பிரம்மாண்ட சிலை அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெஸ்சியின் இந்திய வருகையை முன்னிட்டு இந்த சிலை நிறுவப்பட்டது. 2022 உலகக் கோப்பையை கையில் ஏந்தியபடி மெஸ்சி நிற்கும் வடிவில் உருவாக்கப்பட்ட இந்த சிலை, ஆசியாவின் மிக உயரமான மெஸ்சி சிலைகளில் ஒன்றாக கருதப்பட்டது.
சமீபத்தில் பலத்த காற்று வீசியபோது சிலை அசைந்ததாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து மேற்கு வங்காள அரசின் பொது பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சிலையின் கட்டமைப்பில் குறைபாடுகள் இருப்பதும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களின் உதவியுடன் சிலையை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. சிலை முழுமையாக அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வேறு பொருத்தமான இடத்தில் மீண்டும் நிறுவுவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



