நஜிப் ஆதரவுப் பேரணி: பாஸுடன் அம்னோ கூட்டுச் சேரும்-துணைப் பிரதமர் திட்டவட்டம்!

- Muthu Kumar
- 03 Jan, 2025
புத்ராஜெயா, ஜன. 3-
சிறையில் இருந்துவரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை ஆதரித்து பாஸ் ஏற்பாட்டில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பேரணியில் அம்னோவும் கலந்து கொள்ளும் என்று துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
அப்பேரணியில் அம்னோ கலந்து கொள்வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு அக்கட்சி விசுவாசமுடன் இருக்கிறதா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது எனும் ஜசெக தலைவர் லிம் குவான் எங்கின் கூற்றையும் ஸாஹிட் நேற்று நிராகரித்தார். பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம்மின் அக்கூற்று அவரின் சொந்த கருத்தாகும் என்று அம்னோ தலைவருமான ஸாஹிட் குறிப்பிட்டார்.
லிம்மின் காலம் முடிந்து விட்டது. இப்பேரணி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், தற்போதைய ஜசெக தலைமைத்துவத்தில் அவருக்குச் சற்றேனும் நம்பிக்கை இருக்க வேண்டும். ஒற்றுமை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்த அவர் முனையக்கூடாது என்றார் அவர்.
ஏற்கெனவே அறிவித்தபடி, வரும் திங்கட்கிழமையன்று நடைபெறும் பேரணியில் அம்னோ கலந்துகொள்வது திண்ணம் என்று கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
தம்மை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்கும் துணை அரச உத்தரவு சம்பந்தப்பட்ட நஜிப்பின் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் செவிமடுக்கவுள்ள நாளில்தான் இப்பேரணியும் நடத்தப்படுகிறது. அப்பேரணிக்கு 200 பேருந்துகளில் நஜிப்பின் ஆதரவாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்னோ, பாஸ் உறுப்பினர்களைத் தவிர்த்து பெர்சத்துவின் தலைவர்களும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பேரணியை பாஸ் ஏற்று நடத்துவதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் வினவியதற்கு. அது பற்றி அக்கட்சியிடம் நீங்கள் கேட்க வேண்டும் என்று ஸாஹிட் தெரிவித்தார்.அதில் இதர எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்களா எனக் கேட்கப்பட்டதற்கு, அது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *