பாதுகாப்புத் துறையின் ஊழல் எதிர்ப்பு திட்ட கட்டமைப்பில் மாற்றம் தேவை
- Tamil Malar (Reporter)
- 14 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 14-
பாதுகாப்பு அமைச்சகத்தின் (MINDEF) ஊழல் எதிர்ப்பு திட்டத்தை மறுசீரமைப்பது, பாதுகாப்புத் துறையின் கொள்முதல் (perolehan) அமைப்பின் ஆழமான கட்டமைப்பு பிரச்சினைகளைத் தொடும் போது மட்டுமே உண்மையான அர்த்தம் பெறும் என்று மலேசிய ஊழல் கண்காணிப்பாளர் அமைப்பின் (MCW) தலைவர் ஜாயிஸ் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறையின் பெரும்பாலான கொள்முதல் சூழமைப்பு நீண்ட காலமாக மூடிய வலையமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்றார். இதில், முன்னாள் இராணுவ அதிகாரிகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய நிறுவனங்களும் அடங்குகின்றன. இந்த நிலைமை, நலன் முரண்பாடு, பிரதிநிதி நிறுவனங்கள் (proksi), கார்டெல் அமைப்புகள் உருவாவதற்கான வாய்ப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த நடைமுறை காரணமாக, திறந்த தெண்டர் என கூறப்படும் செயல்முறைகள் வெளிப்படையான அலங்காரமாக மட்டுமே உள்ளன. உண்மையான முடிவுகள் பழைய தொடர்புகள், செல்வாக்கின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான அனைத்து திட்டங்களும் எந்தவித விலகலும் இன்றி திறந்த தெண்டர் முறையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை MCW முன்வைத்துள்ளது. மிக அபூர்வமான சூழ்நிலைகளில் மட்டும் விலக்கு அளிக்கப்படலாம்; அத்தகைய விலக்குகள் பதிவு செய்யப்படுவதுடன், சுயாதீனமாக ஆய்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்கும் வகையில் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் ஜாயிஸ் அப்துல் கரீம் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



