முன்னாள் 'ஜான்ஸ்' இயக்குநரிடமிருந்து வெ.4 கோடியே 50 லட்சம் பறிமுதல்!

- Muthu Kumar
- 06 Dec, 2024
கோத்தாகினபாலு, டிச. 6 -
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளுமாறு, சபா மாநில குடிநீர் இலாகாவின் (ஜான்ஸ்) முன்னாள் இயக்குநர் முஹமட் தாஹிர் தாலிப் (வயது 62), அவரின் மனைவி ஃபௌசியா பியூட் (வயது 59) மற்றும் ஜான்சின் முன்னாள் துணை இயக்குநர் லிம் லாம் பெங் (வயது 70) ஆகியோருக்கு கோத்தாகினபாலு செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தங்களுக்கு எதிராக விசாரணையைத் தொடர்வதற்கான போதிய முகாந்திரங்கள் இருப்பதை அரசு தரப்பு நிரூபித்திருப்பதால், 37 கள்ளப் பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகளில் தங்களை தற்காத்து வாதம் புரியுமாறு நீதிபதி அபு பாக்கார் மனாட், அவர்கள் மூவருக்கும் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 முதல் 28ஆம் தேதி வரையிலும் ஏப்ரல் 28 முதல் 30ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
அரசு தரப்பின் வாதங்கள் முடிவுற்ற பின்னர், நேற்று வியாழக்கிழமை தமது முடிவை அறிவித்த நீதிபதி, விஸ்மா மஜ்லிஸ் உகாமா இஸ்லாம் சபாவில் உள்ள முஹமட் தாஹிரின் அலுவலகத்தில் 2 கோடியே 36 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை சாட்சிகளின் சாட்சியங்கள் அம்பலப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
அதோடு, முஹமட் தாஹிர் மற்றும் ஃபௌசியா பியூட்டின் வீட்டிலிருந்து 85 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியும் ஒரு மஸ்டா காரிலிருந்து 91 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியும் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரிலிருந்து 41 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.அமெரிக்க டாலர், பவுண்டு ஸ்டெர்லிங்,யூரோஸ், யூஏஇ டிர்ஹாம், தாய் பாத், சீன யுவான். ஹாங்காங் டாலர், ஜப்பானிய யென், வியட்னாமிய டோங், தென் கொரியாவின் வோன், சவூதி ரியால், சிங்கப்பூர் டாலர் மற்றும் இந்தோனேசிய ரூபியா ஆகிய வெளிநாட்டு நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றைத் தவிர்த்து. முஹமட் தாஹிரின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த 41 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.“விசாரணை முழுமையிலும் சாட்சிகளினால் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து மிக அதிகளவில் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டிருப்பதன் வழி, சபா மாநில குடிநீர் இலாகாவின் இயக்குநர் என்னும் முறையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முதல் நபரான முஹமட் தாஹிர் தமது பதவியை துஷ்பிரயோகம் • செய்திருப்பதை அரசு தரப்பு நிரூபித்திருக்கிறது.
"கடந்த 2005 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் செயல்பட்ட, ஒருமுகப்படுத்தப்பட்ட பண வசூலிப்புத் திட்டம் மூலம், சட்டவிரோத நடவடிக்கைகளில் குறிப்பாக லஞ்ச ஊழலில் முஹமட் தாஹிர் சம்பந்தப்பட்டுள்ளார்” என்று, தமது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.சாட்சிகளின் சாட்சியங்கள்படி, முஹமட் தாஹிரின் ஒப்புதலின்றி, உத்தரவின்றி, அங்கீகரிப்பின்றி மற்றும் சம்பந்தமின்றி ஒருமுகப் படுத்தப்பட்ட பண வசூலிப்புத் திட்டத்தை மேற்கொள்ள முடியாது என்ற ஆதாரமும் இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை, இவ்வழக்கின் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையின்போது தெரிவிப்பதிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தோல்வி கண்டிருக்கிறார் என்று அபு பாக்கார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *