சிலாங்கூரில் மதிப்பீட்டு வரி 25% உயர்கிறது-இங் சுய் லிம்!

top-news
FREE WEBSITE AD

ஷாஆலம், டிச. 10-

சிலாங்கூரில் வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து எல்லா ஊராட்சி மன்றங்களிலும் மதிப்பீட்டு வரி 25 விழுக்காடு உயர்த்தப்படுகிறது. இதற்கு சிலாங்கூர் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிலாங்கூரின் பன்னிரண்டு ஊராட்சி மன்றங்களிலும் புதிய மதிப்பீட்டு வரி ஜனவரி முதல் தேதியிலிருந்து அதிகரிக்கப்படுகிறது என்று மாநில ஊராட்சிக்குழுவின் தலைவர் இங் சுய் லிம் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

மதிப்பீட்டு வரியை மேலும் 25 விழுக்காடு உயர்த்த கடந்த ஜூன் மாதத்தில் சிலாங்கூர் மாநில அரசு அறிவித்திருந்தது. அதே வேளையில், அந்த உயர்வு குறித்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றங்கள் அனுமதியளித்திருந்தன.

புதிய மதிப்பீட்டு வரிகள் கடந்த 2019 ஆண்டிலேயே நடப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அப்போதைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அத்திட்டத்தை அங்கீகரிக்கும் முடிவை மாநில அரசாங்கம் ஒத்தி வைத்தது என்றும் இங் தெரிவித்தார்.

புதிய மதிப்பீட்டு வரி உயர்வை ஆட்சேபித்து பொதுமக்களிடமிருந்து ஒரு லட்சத்து நாற்பத்தெட்டாயிரம் புகார்கள் கிடைத்துள்ளன என்று ஷாஆலமில் சிலாங்கூர் சட்டமன்றத்தில் புதிய மதிப்பீட்டு வரி பற்றி விவரித்தபோது அவர் சொன்னார். இருபத்தைந்து விழுக்காடு புதிய மதிப்பீட்டு வரி நடப்புக்கு வந்தாலும், சொத்து உரிமையாளர்களுக்கு தாங்கள் செலுத்த வேண்டிய மொத்த மதிப்பீட்டுத் தொகையில் எழுபத்தைந்து விழுக்காடு வரை கழிவு வழங்கப்படும் என்றார் இங்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *