KIDS GOT TALENT MALAYSIA” போட்டியில் மாணவி பிரித்திஷா ஷண்முகம் மூன்றாம் நிலையில் வெற்றி

top-news
FREE WEBSITE AD

-தி.கிரிஷன்-

தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் உலக அரங்கில் மிக உயரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார் மலேசியாவின் இளம் சாதனையாளர் பிரித்திஷா ஷண்முகம். 

அண்மையில் கோலாலம்பூர் கலைநிகழ்ச்சி திரையரங்கில் நடைபெற்ற “KIDS GOT TALENT MALAYSIA” போட்டியில் கெடா, பாடாங் செராய் என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரித்திஷா ஷண்முகம் கண்கட்டி திறன் போட்டியில் பங்கேற்று மூன்றாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார். 

மலேசியா முழுவதிலுமிருந்து சுமார் 400 திறமைமிக்க மாணவர்கள் பங்கேற்ற தொடக்க நிலைத் தேர்வில், நாட்டின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. 

நடுவர்களின் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு 200 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், பிரித்திஷா பங்கேற்ற 'பல்வகை திறமைகள்' (Variety Acts) பிரிவில் 20 போட்டியாளர்கள் இறுதி மேடையில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, பார்த்தல், தொடுதல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் ஆகிய ஐம்புலன்களின் உதவியோடுதான் மனிதர்கள் சுற்றுப்புறத்தில் உள்ள பொருள்களை உணர்ந்து செயல்படுவார்கள். ஆனால் இத்தமிழ்ப்பள்ளி மாணவி ஐம்புலன்களையும் தாண்டி, தமது 'ஆறாவது அறிவு' எனப்படும் அசாத்திய உள்ளுணர்வைப் பயன்படுத்தி, எந்தவொரு பொருளையும் தொடாமல், நுகராமல், பார்க்காமல் மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு அங்குக் கூடியிருந்த பன்னாட்டு நடுவர்களையும் பார்வையாளர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தினார்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில், சாதாரண மனித உணர்வுகளைக் கடந்து அவர் வெளிப்படுத்திய இந்த அபாரமான மன ஒருமைப்பாடும் உள்ளுணர்வும் நடுவர் பக்கமிருந்து பேராதரவையும் பாராட்டு மழையையும் பெற்றுத் தந்தது. 

இந்த அசாத்திய திறமைக் குறித்துப் பேசிய பிரித்திஷா, மன ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும் உள்ளுணர்வை மேம்படுத்துவதற்கும் தேவைப்படும் கடினமான யோகாசனம், தியானம் போன்ற பயிற்சிகளில் தாம் கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிக் கல்வியோடு சேர்த்துத் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

பிரித்திஷா தமது சிறு வயது முதலே கல்வி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றுப் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். முன்னதாக, 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற 7-வது சூப்பர் மெமரி விடுமுறை முகாமிலும் (Super Memory Holiday Camp), 2025-ஆம் ஆண்டின் 11-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பங்கேற்றுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற 'குவாண்டம் வேக வாசிப்புத் திட்டத்தில்' (Quantum Speed Reading Program) இணைந்து சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் நடைபெற்ற 'ரைசிங் ஸ்டார் ஐகான்' (Rising Star Icon) போட்டியில் கண்கட்டி வித்தைக்கான சிறப்புத் திறமை வெற்றியாளராக (Special Talent Blindfold Champion) மகுடம் சூடிய பெருமையும் இவருக்கு உண்டு. 

இவருடைய இந்தத் தொடர் விடாமுயற்சியையும் அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமைப்புகளான Asian World Records Malaysia, Asian Book of World Records ஆகிய இரு அமைப்புகளும் அண்மையில் இவருக்குப் பெருமைக்குரிய சர்வதேச அங்கீகாரங்களை வழங்கி கௌரவித்துள்ளன.

தமது இந்த வெற்றிகரமான சாதனைப் பயணத்திற்குத் தொடர் வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் திகழ்ந்த 'அச்சீவர்ஸ் மைண்ட் அகாடமி'யின் (Achievers Mind Academy) மாஸ்டர் அழகன் கோவிந்தன் அவர்களுக்கும், தமக்குத் தொடர் ஆதரவும் ஊக்கமும் அளித்த 'பிரைன் குரோ' (Brain Grow) அமைப்பின் பஹ்லு ராம் சிந்தி அவர்களுக்கும் பிரித்திஷா தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 

இளமையிலேயே சாதனைப் சிகரங்களைத் தொட்டு வரும் என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி பிரித்திஷாவின் இந்த நெடும் பயணம், "நாங்களும் சளைத்தவர்கள் அல்ல" என்பதை நிரூபித்து, உலக அளவில் சாதிக்கத் துடிக்கும் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஒரு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

இதனிடையே, இவ்வெற்றியின் மூலம் "AMERICA GOT TALENT" போட்டிக்கான தேர்வுச் சுற்றியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் பிரித்திஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *