மதஸ்தல நிலம் தொடர்பான பதற்றம்- சட்ட வழியே தீர்வு தேவை என பெரிக்காத்தான் நேஷனல் வலியுறுத்து
- Surendran Sumdraraj
- 13 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 13-
மற்றவர்களின் நிலம் அல்லது அரச நிலத்தில் மதஸ்தலங்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சமீப காலமாக உருவாகியுள்ள பதற்றத்தை பெரிகாத்தான் நேஷனல் (PN) மிகவும் கவலைக்கிடமாக கவனித்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் தேசிய ஒற்றுமை பிரிவு பொறுப்பாளர் டாக்டர் ஹலிமா அலி தெரிவித்தார்.
மத உணர்வுகள் மற்றும் இனங்களுக்கு இடையிலான உறவுகளைத் தொடும் எந்த விஷயமும் மிகுந்த பொறுப்புடன், சட்டத்தின் அடிப்படையில் மற்றும் அதிகாரப்பூர்வ நிர்வாக நடைமுறைகளின் மூலம் கையாளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட்ட நடவடிக்கைகள், தூண்டுதல் செயல்கள் அல்லது வன்முறைக்கு இடமளிப்பது முற்றிலும் ஏற்க முடியாதது என்றும் அவர் மேலும் சொன்னார்.
சமீபத்தில் வாகனங்கள் எரிக்கப்பட்டது மற்றும் சில இடங்களில் உடல் தாக்குதல்கள் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்களை அவர் கடுமையாக கண்டித்தார். இத்தகைய செயல்கள் சமூக ஒற்றுமையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களிடையே மேலும் பெரிய பதற்றத்தை உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
“மலேசியா பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல பண்பாடுகள் இணைந்து வாழும் ஒரு நாடாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பன்மை தன்மையே நாட்டின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது.
எனவே நில உரிமை, மதஸ்தலங்கள் அல்லது நிர்வாக தொடர்பான எந்தத் தகராறாக இருந்தாலும் அது சட்ட வழிமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். எந்த தரப்பும் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்து பொதுச் சமாதானத்தை பாதிக்கக் கூடாது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



