வியாபாரி ஒருவர் இல்லாத முதலீட்டு மோசடியில் RM 544,200 பணம் இழந்தார்!

- Muthu Kumar
- 20 Dec, 2024
(கோகி கருணாநிதி)
கூலாய், டிச. 20-
45 வயதுடைய உள்ளூர் வியாபாரி ஒருவர், இல்லாத முதலீட்டு மோசடியில் சிக்கி, மொத்தம் ரி.ம544,200 இழந்தார்.கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு 17ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் படி, குறைந்தது 120விழுக்காடு லாபத்தை மூன்று நாட்களுக்குள் தருவதாகக் கூறிய முதலீட்டு வாய்ப்பில் ஈர்க்கப்பட்டு, இந்த இழப்பை சந்தித்ததாக குறிப்பிடப்படுகிறது. சந்தேக நபர், அந்த லாபத்தை 'Cap Max' எனும் செயலியின் கணக்கில் சேர்த்துவிடுவதாக கூறினார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் முதலில் ஃபேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தில் ஈர்க்கப்பட்டு, ஒரு சீன நபரால் தொடர்பு கொள்ளப்பட்டார். அவரால் "Group Saham Malaysia" என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர அழைக்கப்பட்டார். பின்னர், 'Cap Max' செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது, இது பின்னாளில் மோசடிக்கு வழிவகுத்தது என விசாரணையில் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர், 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை, மொத்தம் வெ.544,200 வரை, ஏழு முறை நிதி பரிவர்த்தனைகளை நான்கு வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தினார். ஆனால், அந்த செயலி மூலம் சரிபார்த்தபோது, அவரின் பணம் RM 9,396,194.02 எனக் காணப்பட்டது. பணத்தை அந்த செயலியின் மூலம் எடுக்க முயற்சிக்கையில், கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. தான் மோசடியில் சிக்கியதாக உணர்ந்த பிறகு, உடனடியாக போலீசில் புகார் செய்தார்.
கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி டான் செங் லீ, இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420இல் (தந்திரமான மோசடி) விசாரிக்கப்படுவதாக தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி குறைந்தது ஓர் ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.
டான் செங் லீ, உயர்ந்த லாபத்தை திடீரென அளிப்பதாகக் கூறும் முதலீட்டு வாய்ப்புகளில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், மலேசிய அரச காவல்துறை , மலேசியா தேசிய வங்கி, மற்றும் பாதுகாப்பு ஆணையம் போன்ற இணைய சேவைகளைப் பயன்படுத்தி, வணிக குற்றங்களின் நடைமுறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். மக்களுக்கு, மலேசிய போலீசின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மூலமாக மேலும் தகவல்களைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
போலீசார், சந்தேகத்திற்கிடமான முதலீட்டு வாக்குறுதிகளால் எளிதில் ஈர்க்கப்படாமல், ஆன்லைன் நிதி பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் செயல்பட மக்களை அறிவுறுத்துகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *