ம.இ.கா விண்ணப்பித்தது ரகசியமல்ல! கடந்த ஆண்டிலேயே முடிவு செய்துவிட்டோம்! - முகைதீன் யாசின்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 22: ம.இ.கா-வின் பெரிகாத்தான் நேஷனல்க கூட்டணியில் இணைவதற்கான விண்ணப்பத்திற்கு PN ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாக, முன்னாள் பிரதமரும் PN முன்னாள் தலைவருமான டான் ஸ்ரீ முகைதீன் யாசின் உறுதிப்படுத்தினார்.

ம.இ.கா-வை பெரிகாத்தான் கூட்டணியில் ஏற்றுக்கொள்ளும் முடிவு கடந்த ஆண்டிலேயே எடுக்கப்பட்டதாகவும், தற்போது இறுதி தீர்மானம் எடுக்கப்படுவது கட்சித் தலைமைத்துவத்தின் கைகளில்தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ம.இ.கா விண்ணப்பித்துள்ளது என்பது ரகசியமல்ல. அதைப் பற்றி நாங்கள் பரிசீலித்தோம். கடந்த ஆண்டிலேயே ம.இ.கா-வை ஏற்க முடிவு செய்துவிட்டோம் என்று நேற்று ஒரு பேட்டியில் முகைதீன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 முதல் PN தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள முகைதீன், ம.இ.கா-வின் அரசியல் பாதையும், எப்போது முடிவெடுக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் முழு அதிகாரம் கட்சித் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் எம். சரவணனும் தன்னை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும்,  பெரிகாத்தானின் எதிர்பார்ப்புகளை அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என்றும் முகைதீன் கூறினார்.

ம.இ.கா இணைந்தால், இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் புதிய மாற்றம் ஏற்படும் என்றும், வாக்காளர்களுக்கு அதிகமான தேர்வுகள் கிடைக்கும் என்றும் முகைதீன் குறிப்பிட்டார்.

ம.இ.கா தங்களுடன் சேர்ந்தால், இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் PN-ன் கீழோ அல்லது அதன் அணியில் இருப்பது போல் ஆகும். இந்திய வாக்காளர்களுக்கு தங்களது அரசியல் தேர்வை முடிவு செய்யும் உரிமை உள்ளது  என்றார்.

இதற்கிடையில், கடந்த டிசம்பர் 9 அன்று நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தில் ம.இ.கா -வின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதாக, மலேசியகினி செய்தி வெளியிட்டது. ம.இ.கா இணைப்பு PN-ன் தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்தி, நகர்ப்புறங்களில் குறிப்பாக இந்திய வாக்காளர்களிடையே ஆதரவை அதிகரிக்கும் என அந்த அறிக்கை தெரிவித்தது.

ஆனால் PN-ன் கூட்டணிக் கட்சியான மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP), ம.இ.கா இன்னும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியில் உள்ளதால், அதன் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ம.இ.கா, பாரிசான் நேஷனலில்  இருந்து விலகும் விவகாரம் கடந்த சில காலமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த நவம்பரில் நடைபெற்ற கட்சியின் 79-ஆவது பேராளர் மாநாட்டில், கட்சியின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் பரிசீலிக்க தலைமைத்துவத்திற்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அம்னோ தலைவர்கள் இந்த ஊகங்களை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். BN பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காதீர், ம.இ.காவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பெறப்படவில்லை என்றும், அந்தக் கட்சி இன்னும்  பாரிசான் நேஷனலின் இன் ஒரு பகுதியாகவே இருப்பதாகவும் நேற்று இரவு தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *