30 பேருக்குத் தங்கப்பதக்கங்கள்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்!
.jpg)
- Thina S
- 04 Dec, 2024
மலாயாப் பல்கலைக்கழகத்தின் 64-ஆவது பட்டமளிப்பு விழாவில் இந்திய ஆய்வியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 30 மாணவர்களுக்கு, ஓம்ஸ் அறவாரியத்தின் சார்பில் தங்கப் பதக்கம் வழங்கும் நிகழ்வு, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தங்கப் பதக்கத்தினை எடுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய
ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் கோ.சிவபாலன்,
தொழிலதிபர் முத்துவேல்,
சமூகக் கலைப்புலத் தாளாளர் பேராசிரியர் டத்தோ முனைவர் டேனி வோங் த்சீ
கென், கோ.சா அறக்கட்டளை தோற்றுநரும், முன்னாள் துணை அமைச்சருமான டான்ஸ்ரீ குமரன், இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் பெற்றோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பதக்கம் பெற்ற மாணவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். 17 ஆண்டுகளாக நம் இந்திய மாணவர்களை அங்கீகரித்து ஊக்குவித்து வரும் ஓம்ஸ் அறவாரியத்திற்கும், அதன் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கும் தங்கள் நன்றியை அவர்கள் தெரிவித்துக்கொண்டனர். நம்மவர்கள் கல்வி பெறுவதற்கு எவ்வளவு சிரமங்களை மேற்கொள்கிறார்கள். அத்தகையவர்களின் வெற்றியை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் இது போன்ற தங்கப் பதக்க விருதுகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அவர்களின் பேச்சில் உணர முடிந்தது.
இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் கோ.சிவபாலன் பேசுகையில்
“இன்றைய தங்கப் பதக்க விழாவில் தங்கம் பெறும் இளங்கலை மாணவர்கள் 17 பேரும் 3.7 மதிப்பெண்கள் பெற்று சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். இந்திய ஆய்வியல் துறையில் பயிலும் அனைத்து மாணவர்களும் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்கான உந்துதலாக இருந்தவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்கள். ஒவ்வோர் ஆண்டும் இந்த நாட்டிலேயே தங்கப்பதக்கம் பெறும் மாணவர்கள் எனில், அது இந்திய ஆய்வியல் துறை மாணவர்கள்தான் என தெரிவித்தார். இவ்வாண்டு இந்திய ஆய்வியல் துறைக்கு 35 புதிய மாணவர்கள் இணைந்துள்ளனர். இந்திய ஆய்வியல் துறை என்பது சமூகப் பொறுப்புடமைமிக்க துறையாகத் திகழ்கிறது. சில நேரங்களில் மாணவர்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழலில் அவர்களின் மதிப்பெண்கள் பெற முடியாத இக்கட்டானச் சூழல் நிலவும் போது தொழிலதிபர் முத்துவேல் அவர்கள் உடனடியாகக் கட்டணத்தைச் செலுத்தி மாணவர்களுக்குப் பெரும் உதவியை வழங்கி வருகிறார்” என்று கூறினார்.
தொழிலதிபர் முத்துவேல் பேசுகையில்,
“நான் தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்குத் தொழில்
செய்ய வந்த நபர். இந்தச் சமூகம் பல்வேறு தொழிலில் நான் சிறந்து விளங்க
வாய்ப்பளித்த சமூகம் என்பதால் நான் இச்சமூகத்திற்குக் கடமைப்பட்டுள்ளேன். ஓம்ஸ்
பா.தியாகராஜன் போன்றவர்கள் கடலளவு தொண்டு செய்யும் நிலையில்,
நான் கடுகளவு தொண்டாற்றுகிறேன், ஓம்ஸ் பா.தியாகராஜன்
அவர்களின் சொத்து மதிப்பை விடவும் அவர் அளித்த கொடையின் மதிப்பு அதிகம்.
அவரளவிற்குக் கொடை வழங்க யாருமில்லை, இதை என் பொறுப்பாக
நினைத்து செய்கிறேன். அடுத்த தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய
கடமை நமக்கு உள்ளதாக நான் உணர்கிறேன்” என்றார்.
சமூகக் கலைப்புலத் தாளாளர் பேராசிரியர் டத்தோ முனைவர் டேனி வோங் த்சீ கென் பேசுகையில்,
“பெற்றோர்களின் தியாகத்தாலும் பேராசிரியர்களின்
வழிகாட்டலாலும் விளைந்த நாள் இது. இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கியிருக்கிறது
ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களைப் போன்ற நல்லுள்ளங்களின் சேவை. நான் தாளாளராக இருக்கும்
துறைக்குப் பிரதமர் அன்வார் வந்து சிறப்பித்திருக்கிறார் எனும் போது பெருமை
மிகுந்திருக்கிறது. அந்தப் பெருமையை நடத்திக் காட்டியவர் ஓம்ஸ்.பா.தியாகராஜன்
அவர்கள். இப்போது இந்திய ஆய்வியல் துறைக்கு 2 மில்லியன் நிதியை அரசாங்கம் வழங்கி
உள்ளது. அதற்கு முதல் காரணம் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்கள்.
பெற்றோர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் செய்யும்
தியாகத்தைப் பிள்ளைகளிடம் மறைக்க வேண்டாம்” என்று
கேட்டுக்கொண்டார்.
மேனாள் துணை அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் பேசுகையில்,
“16
ஆண்டுகளாக இந்திய ஆய்வியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம்
வழங்குவது என்பது அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லும் செயல் அல்ல. இது பெரும் சாதனை.
ஓம்ஸ்.பா.தியாகராஜன் என்னுடைய் தம்பி என மேடைகளில் கூறும் போது உளமார உணர்ந்து
சொல்கிறேன். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தங்கப்பதக்க விழா இப்போதும் தொடர்கிறது.
கொடையாளர் இருக்கிறார், இந்திய ஆய்வியல் துறை இருக்கிறது, முனைவர்களும் பேராசிரியர்களும் இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு முதல்
தங்கப்பதக்கம் வாங்கியவரைக் காணவில்லை. தங்கப்பதக்கம் பெற்றவர்கள் பெற்றதுடன்
இருந்து விடாமல், இச்சமூகத்திற்குத் தாம் நன்றிக்கடன்
பெற்றிருக்கிறோம் என்பதை உணரும் நேரமிது. 3 தலைமுறைகளைக் கடந்து விட்டேன், இந்த தலைமுறைக்கானத் தலைவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வர வேண்டும்
என்கிற ஆசையும் எதிர்பார்ப்பும் மிகுந்து உள்ளது என்னிடம்.
தலைவர்கள் என்றால் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சமூகத்
தலைவர்களும் உள்ளடங்கியது. இந்த சமூகம் கற்றோராகிய உங்களின்
தலைமைத்துவத்தில் இயங்க காத்திருக்கிறது. அந்தக் காத்திருப்பை நிறைவேற்றும்
பொறுப்பும் கடமையும் நம்மிடம் இருக்கிறது. அதனை நீங்களும் உணர்ந்தாக வேண்டும்.
தலைமைத்துவமிக்க அடுத்த தலைமுறையைக் காண வேண்டும் என்பது என் அவா” என்று
தெரிவித்தார்.
ஓம்ஸ் பா.தியாகரஜன் பேசுகையில்,
“இங்கே எல்லோரும்
எல்லாவற்றையும் குறிப்பிட்டனர். கற்றவர்களைப் பெருமைப்படுத்துவதில் எனக்கும்
மகிழ்ச்சி. முந்தைய ஆண்டுகளில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள் சமூகத்திற்கு என்ன
செய்தார்கள்? என்ன செய்கிறார்கள்?
எனும் கேள்வியும் நமக்குள் உள்ளது. ஆனால் இந்த தலைமுறை பட்டதாரிகள் இந்த
சமூகத்திற்குச் செய்ய வேண்டியது அவசியமும் கட்டாயமும் கூட. செய்வார்கள் என
எல்லோரையும் போல நானும் நம்புகிறேன்.
இந்திய ஆய்வியல் துறையுடன் திருக்குறள் மாநாடு இதே அரங்கத்தில் நடந்தேறியது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய பிரதமர் அன்வார்
பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தாளாளர் டேனி வோங் அவர்களின் பங்களிப்பு
அளப்பரியது. மீண்டும் பிரதமராகியதும், அவர் மறவாது இந்திய ஆய்வியல்
துறைக்கு வந்ததும், 2 மில்லியன் நிதி வழங்கியதற்கும் நான்தான்
காரணம் என்பார்கள் பலர். அது உண்மையல்ல. நான் பிரதமரிடம் 2 மில்லியன் கோரிக்கையை
முன்வைக்கவில்லை. நான் முன் வைத்திருந்தால் அது 2 மில்லியனாக இருந்திருக்காது 5
மில்லியனாக இருந்திருக்கும்.
இந்திய ஆய்வியல் துறைக்காக வழங்கப்பட்ட 2 மில்லியன் நிதிக்கு யார்
யார் வந்து கேட்கிறார்கள், அதைச் செய்யுங்கள் இதைச் செய்யுங்கள் என
உத்தரவிடுகிறார்கள். இதைப் பிரதமரே விரும்பமாட்டார். ஆய்வுக்காக அந்த தொகையைச்
செலவிடுங்கள். நம் சமூகத்தில் முதுமொழி ஒன்று உள்ளது ‘பிச்சை
எடுத்தாராம் பெருமாள், அதைப் பிடுங்கித் தின்றதாம் அனுமார்’ என்று. உண்மையில் நம் சமூகத்திற்காகப்
பிச்சை எடுக்கும் பெருமாள்களுக்குப் பஞ்சம்தான். ஆனால்,
அனுமார்கள் அதிகம். இந்திய ஆய்வியல் துறைக்கு ஒரு வேண்டுகோள். அந்த 2 மில்லியன் என்பது பிரதமரின் சிறப்பு நிதி ஒதுக்கீடு. அதனை
ஆய்வுக்காகப் பயன்படுத்துங்கள். அதற்கானப் பணிகளை உடனடியாகத் தொடங்குங்கள், நம் சமூகத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ள பல கல்விமான்கள் உள்ளனர்.
அவர்களுடன் ஒன்றிணைந்து சமூகத்தின் மறுமலர்ச்சிக்கான ஆய்வுகளையும் தரவுகளையும்
திரட்டுங்கள். இந்திய ஆய்வியல் துறையின் அடுத்தக்கட்ட நகர்விற்கும் வளர்ச்சிக்கும்
அந்த நிதியைப் பயன்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *