அரசியல் நிலைத்தன்மைக்கு அன்வாரை ஆதரியுங்கள்-துணைப் பிரதமர் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 3-

மலேசியாவில் அரசியல் நிலைத்தன்மையும், பொருளாதார வளர்ச்சியும் நீடித்து வருவதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குப் பிளவுபடாத ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று கோரிக்கை விடுத்தார். அடுத்த பொதுத்தேர்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் வேளையில், பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியல் நிலைத்தன்மை நீடித்து வந்தால்தான் கூடுதலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மலேசியா ஈர்க்க முடிவதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் உத்வேகத்தை ஏற்படுத்த முடியும். இதன்மூலம், எதிர்கால மேம்பாட்டுக்கு வலுவான அடித்தளத்தையும் அமைக்க முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மக்களின் நல்வாழ்வுக்காக அடுத்த பொதுத்தேர்தல் வரை இந்த அரசாங்கத்தைப் பாதுகாத்து வரவேண்டும். நிலையான அரசியல் சூழலை நிலைப்படுத்துவதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்துவதும் பரம ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதும் மலேசியர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும்தான் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்று போட்காஸ்ட் உத்தாமா புல்லெட்டின் உத்தாமாவுக்கு அளித்த நேர்காணலில் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் தலைவருமான அமாட் ஸாஹிட் தெரிவித்தார்.

அன்வாருக்கு வலுவான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகச் சூளுரைத்த அவர், பாலஸ்தீனம் போன்ற விவகாரங்களில் அன்வார் கொண்டுள்ள நிலைப்பாட்டினால் அனைத்துலக நாடுகளின் அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ளார். இதனால், உலகளாவிய தலைவர் என்று அவரை அழைக்க விரும்புகிறேன். பாலஸ்தீனர்களின் காஸா பிரதேசத்தின் மறுநிர்மாணத்திற்கு அன்வார் அளித்துவரும் ஆதரவினால், இஸ்லாமிய நாடுகளினாலும் உலகத் தலைவர்களாலும் போற்றப்படும் ஒரு தலைவராகவும் திகழ்கிறார் என்றார் அமாட் ஸாஹிட்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *