மிரட்டல் விடுத்த கன்னட அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றத்தின் தரமான தீர்ப்பு!

- Muthu Kumar
- 20 Jun, 2025
நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காதவரை, 'தக் லைஃப்' படத்தை திரையிட விட மாட்டோம் என்று மிரட்டல் விடுத்த கன்னட அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் குட்டு வைத்துள்ளது.
கன்னட அமைப்புகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டதுடன், முறைப்படி அனுமதி பெற்று வெளியிடப்படும் ஒரு படத்தை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு குழுவினர் சொல்கிறார்கள் என்றால், அங்கு தான் மாநில அரசு தனது சட்ட அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற கடமையையும் நீதிபதிகள் நினைவூட்டியுள்ளனர். மிரட்டல் விடுக்கும் அமைப்புகளுக்கு மாநில அரசு பயந்து நடப்பது கூடாது என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர்.
பல சமயங்களில் கன்னட அமைப்புகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருந்து கொண்டு மிரட்டல் விடுக்கும் செயல்கள் அரங்கேறி வரும் நிலையில், 'தக் லைஃப்' பட விவகாரத்தின் மூலம் அவர்களது எல்லை மீறிய செயல்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
நிலைமையை உணர்ந்து கொண்டு மாநில அரசும் திரைப்படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. கன்னட திரைப்பட வர்த்தக சபையும் நெருக்கடிகளுக்கு ஆளாகி விட்டோம். திரைப்படத்தை வெளியிடுவதில் ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு மனம் மாறியிருப்பது வரவேற்கத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பு மூலம் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், அவரது திரைப்படமும் கர்நாடகாவில் திரையிட வழிவகை ஏற்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டிருப்பதற்கு மற்றொரு உதாரணம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *