எட்டாவது முறையாக களம் கண்டது வளர்தமிழ் மன்றத்தின் நல்லார்க்கினியன் பரிசளிப்பு விழா
- Surendran Sumdraraj
- 15 Jun, 2026
தி.கிரிஷன்
தஞ்சோங் மாலிம், ஜூன் 15 –
மலேசிய மண்ணில் மரபுக் கவிதையைத் தழைத்தோங்கச் செய்வதையும், “மரபுக் கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்” எனும் உயரிய முழக்கத்தைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றம் ஏற்றுநடத்திய நல்லார்க்கினியன் பரிசளிப்பு விழா இவ்வாண்டு எட்டாவது முறையாக சிறப்பாக நடைபெற்றது.
கவிதைத் துறையில் புதிய படைப்பாளர்களை உருவாக்குவதோடு, மரபு கவிதையின் தனித்துவச் சிறப்பையும் இலக்கியச் செல்வாக்கையும் இளம் தலைமுறையினரிடையே விதைத்து, தமிழின் பாரம்பரிய இலக்கிய மரபை நிலைநிறுத்தும் அரும்பணியை மேற்கொண்டு இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது
மாணவர் பிரிவு, இளையோர் பிரிவு, பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியின் பரிசளிப்பு விழா 13.6.26 மாலை 3 மணி தொடங்கி 6 மணிக்கு நிறைவடைந்தது. பரதம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கிராமிய நடனம், நாடகம் என்று மாணவர் படைப்புகள் சபையினரின் கண்களுக்கு விருந்தளித்தன.
வளர்தமிழ் மன்ற மதியுரைஞர் இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அவர்களின் வழிகாட்டுதலில் மாணவர் அனைவரும் மிகச்சிறப்பாக நேர்த்தியாக இந்நிகழ்ச்சியை ஏற்றுநடத்தினர். இவ்வாண்டும் 5 கவிஞர்களுக்கு நல்லார்க்கினியன் இலக்கிய விருது வழங்கப்பட்டது. அவர்கள் முறையே, கவிஞர் பத்மநாதன், கவிஞர் இளமணி, கவிஞர் முத்துப்பாண்டியன், கவிஞர் பொன்முகம், கவிஞர் அறிவன் போன்றோர்கள் ஆவர்.
மாணவர் பிரிவில் வேதரூபன் முதல் இடத்தையும், தமிழ்ச்செல்வன் இரண்டாம் இடத்தையும், கலையரசன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ஊக்கத்தொகை விருதுகளை தமிழமுதன், சண்முகப்பிரியா, கீதரசன் ஆகியோர் பெற்றனர்.
இளையோர் பிரிவில் கவிஞர் மகிழன் கணேசன் முதல் இடத்தையும், கவிஞர் ஆதித்தன் மகாமுனி இரண்டாம் இடத்தையும், கவிஞர் புனித்தாம்பிகை மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். இப்பிரிவின் ஊக்கத்தொகை விருதுகள் விண்ணமுதன் ஆத்மலிங்கம், இனியன் மோகன், உசாராணி சாமிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
பொதுப்பிரிவில் கவிஞர் தனசேகரன் ரெங்கசாமி முதல் இடத்தையும், கவிஞர் நாணல் இரண்டாம் இடத்தையும், கவிஞர் அமிர்தா லெட்சுமி மூன்றாம் இடத்தையும் வென்றனர். ஊக்கத்தொகை விருதுகளை கவிஞர் கோ. மகேந்திரன், கவிஞர் சோலை முருகன், கவிஞர் கோவதன், கவிஞர் சரவணன் இராமச்சந்திரன், கவிஞர் பாதாசன், கவிஞர் விஜயலெட்சுமி, கவிஞர் துரைராசு ஆகியோர் பெற்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



