பள்ளி விடுமுறை காலத்தில் கடல் நடவடிக்கைகளை தவிர்ப்பீர்!

- Muthu Kumar
- 21 Dec, 2024
குவாந்தான், டிச. 21-
வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதுடன், மிகப் பெரிய அலைகள் எழும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், பகாங்கில் உள்ள பிரபலமான கடற்கரைகளில் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெலுக் செம்பெடாக், செராட்டிங், செப்பாட், பத்து ஈத்தாம் ஆகிய கடற்கரைகளிலும் பெக்கானில் உள்ள லஜெண்டா மற்றும் ரொம்பினில் உள்ள ஹிபுரான் ஆகிய கடல் பகுதிகள் குளிப்பதற்கு தற்போது பொருத்தமானவையாக இல்லை.அதோடு, கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருக்குமாறு சுற்றுப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை காலகட்டத்தில் கடற்கரைகளுக்கு வருகை புரிந்தால், அங்கு தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அணுக்கமாக கண்காணிக்குமாறு, பகாங் மாநில பொதுத் தற்காப்புப்படை இயக்குநர் சே அடாம் ரஹ்மான் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார்.
"மிகப் பெரிய அலைகளும் பலத்த காற்றும் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். கடற்கரைகளுக்கு அருகில் செல்ல தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.“வடகிழக்கு பருவமழை இன்னும் முடிவடையவில்லை.கடற்கரைகளுக்குச் சென்றால், எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருங்கள். சிறு பிள்ளைகள் மட்டுமின்றி பெரியவர்களும் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது” என்று சே அடாம் கேட்டுக் கொண்டார்.
கடற்கரைகளுக்குச் செல்லும் முன்னர், மலேசிய வானிலை ஆய்வு இலாகாவின் (மெட்மலேசியா) வானிலை கணிப்புகளை சரிபார்க்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், வரும் 24ஆம் தேதி வரையில், பகாங் உட்பட பல மாநிலங்களில் பலத்த காற்று வீசும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் நேற்று அறிவித்த மெட்மலேசியா, கடலில் நீர் மட்டம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *