ஜாசினில் தீ விபத்து – உயிர் தப்பிய வங்கி ஊழியர்
- Surendran Sumdraraj
- 27 Mar, 2026
ஜாசின், மார்ச் 27-
ஜாசின் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், வங்கி ஊழியரொருவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் மாலை 6.30 மணியளவில், ஜாலான் காபாம்–பெம்பான் சாலையில் நடந்த இந்த விபத்தில், 51 வயதுடைய வங்கி பணியாளர் ஓட்டிச் சென்ற எஸ்யூவி (SUV) வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள விளக்கு தூணில் மோதியுள்ளது.
இந்த விபத்தின் தாக்கத்தால், சம்பந்தப்பட்ட Subaru XV வாகனம் முழுமையாக தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விபத்து நேரத்தில் வாகனத்தில் இருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உடனடியாக வெளியேறி தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டார்.
இந்த சம்பவத்தில், அவர் எந்தவித காயங்களும் அடையாமல் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
ஜாசின் மாவட்ட காவல் துறைத் தலைவர், சூப்பிரண்டெண்ட் லீ ராபர்ட் தெரிவித்ததாவது, ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், வாகனம் ஓட்டப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
“விபத்துக்குப் பின்னர் வாகனம் தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. இருப்பினும், ஓட்டுநர் நேரத்தில் வெளியேறி உயிர் தப்பியுள்ளார்,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



