அமெரிக்காவின் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்த PH என் அரசைக் கவிழ்க்க முயன்றது-நஜிப்!

- Muthu Kumar
- 10 Dec, 2024
கோலாலம்பூர். டிச. 10-
பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியுடன் இணைந்து தம்முடைய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்த ஒத்துழைப்பினால் கடந்த 2016ஆம் ஆண்டில்1எம்டிபி நிறுவனத்துடன் தொடர்புடைய 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துகளை மீட்டெடுப்பதற்கு அமெரிக்க நீதித்துறை பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது என்று 1எம்டிபி வழக்கு விசாரணையில் சாட்சியமளித்தபோது நஜிப் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, தம்மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய வழக்கிற்குத் தேவையான முக்கிய ஆவணங்களை வழங்க அமெரிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இந்த ஆவணங்கள் தமது தற்காப்பு வழக்கிற்கு உதவியாக இருந்திருக்கும் என்று நஜிப் கூறினார். கடந்த 2016ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் சொத்துப் பறிமுதல் வழக்கில் அந்த ஆவணங்கள் எனக்கு சாதகமான அம்சமாக இருக்கும் என்பதால், அதனை வழங்க அமெரிக்க நீதித்துறை மறுத்து வருகிறது என்றார்.
மலேசியாவில் அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பக்காத்தான் ஹராப்பானும் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும் செய்த சதித்திட்டத்தால்தான் சொத்துப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என நம்புகிறேன். இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
என்னுடைய கைகளுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்காவிடில் அவர்களின் குற்றச்சாட்டு நீர்த்துப்போவது திண்ணம் என்று 228 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 1எம்டிபி அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப்பணப் பரிமாற்ற வழக்கில் சாட்சியமளித்தபோது நஜிப் கூறினார்.அமெரிக்காவில் 1எம்டிபி நிறுவனத்துடன் தொடர்புடைய நூறு கோடி சொத்துகளை மீட்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க சட்டத்துறைத் தலைவர் லொரேட்டா லிஞ்ச் என்பவர் சொத்துப் பறிமுதல் வழக்கைத் தொடர்ந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையில்1எம்டிபி நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரிகளாலும் அவர்களின் சகாக்களாலும் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான 350கோடி டாலர் கையாடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.தற்போது ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தலைமையேற்றுள்ள பக்காத்தான் ஹராப்பான்தான் அவ்வேளையில் எதிர்க்கட்சிக் கூட்டணியாக இருந்தது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நஜிப் தற்போது 25அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப்பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வருகிறார். இந்த வழக்கில் அவர் தற்காப்பு வாதம் செய்து வருகிறார்.
கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் 2014ஆம் ஆண்டு டிசம்பருக்கும் இடையில் தமது அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் 228 கோடி வெள்ளி வரவு வைக்கப்பட்டிருந்தது. அப்பணம் 1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் அப்பணத்தை நஜிப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *