வாய் பூட்டு உத்தரவு விண்ணப்பம் குறித்து பிறகு கருத்துக் கூறுகிறேன்- ஸாஹிட் ஹமிடி!

- Muthu Kumar
- 24 Jan, 2025
பாங்கி, ஜன. 24-
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கான வீட்டுக் காவல் தொடர்பிலான அரச உத்தரவு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதற்கு எதிராக, “வாய் பூட்டு உத்தரவு அல்லது தடை விதிக்க வேண்டும் என்று. நீதிமன்றத்தைக் கோரும் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் விண்ணப்பம் குறித்து கருத்து தெரிவிக்க. அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஸாஹிட் ஹமிடி மறுத்திருக்கின்றார்.இந்த விவகாரம் குறித்து பின்னொரு நாளில் பதிலளிக்கப் போவதாக, துணைப் பிரதமருமான ஸாஹிட் கூறியுள்ளார்.
“பின்னொரு நாளில் இதற்கு பதிலளிக்கிறேன்" என்று சிலாங்கூர், பாங்கியில் நேற்று வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அது குறித்து செய்தியாளர்கள் கேட்டிருந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, தேசிய முன்னணி தலைவருமான ஸாஹிட் இவ்வாறு பதிலளித்தார்.அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் விண்ணப்பம் குறித்து அம்னோ விவாதித்து விட்டதா அல்லது விவாதிக்குமா என்று, கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஸாஹிட்டிடம் கேட்கப்பட்டது.
அரச உத்தரவு தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கருத்துரைப்பது அல்லது விவாதிப்பதிலிருந்து எந்த ஒரு தரப்பினரையும் தடுக்கும் உத்தரவுதான் இந்தத் தடை உத்தரவாகும்.தடை உத்தரவை வெளியிடுவதற்கு ஏதுவாக, நீதிமன்றத்திடமிருந்து உத்தரவைப் பெறவதற்கான விண்ணப்பத்தை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டதாக, முன்னதாக பெரித்தா ஹரியான் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக, அட்டர்னிஜெனரல் அலுவலகத்தின் சிவில் பிரிவின் துணைத் தலைவர் ஷம்சுல் பொல்ஹசான் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் அரச குடும்பம், சமயம் மற்றும் இனம் என்ற உணர்ச்சிகரமான 3ஆர் விவகாரத்தை சம்பந்தப்படுத்தி இருப்பதால், அரசக் கழகத்தைப் பாதுகாப்பதற்காக, இம்மாதம் 20ஆம் தேதி, அத்தகைய தடை உத்தரவு கோரி தமது தரப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்கும் என்று இம்மாதம் 13ஆம் தேதி ஷம்சுல் கூறியிருந்தார்.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அண்மையில் கருத்துரைத்திருந்த அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி பாட்சில், அத்தகைய விண்ணப்பம் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, அட்டர்னி ஜெனரலுக்கு அமைச்சரவை உத்தரவிட்டிருக்கவில்லை என்று கூறியிருந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில், அரச உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டதா இல்லையா என்பதை அறிவிக்கக் கோரி, அரசாங்கத்தையும் இதர ஆறு தரப்பினரையும் கட்டாயப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோருவதற்காக, நீதித்துறை சீராய்வு வழக்கைத் தொடுப்பதற்கான அனுமதியை, நஜிப் இம்மாதம் 6ஆம் தேதி பெற்றிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *