மலேசியா மீது அமெரிக்கா தடை விதிக்காது- அன்வார் !

- Muthu Kumar
- 29 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 29-
பாலஸ்தீன மக்களுக்கு குறிப்பாக காஸா பிரதேசத்தில் வசித்துவரும் மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடிவருவதற்காக மலேசியா மீது அமெரிக்கா தடை விதிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார ரீதியிலான பலாபலன்களை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம் என்றாலும், இந்த விவகாரத்தில் தொடுக்கப்படும் நெருக்குதலால் மலேசியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என்று அவர் தீர்க்கமாக அறிவித்தார்.
சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடான மலேசியா, காஸா பிரதேசத்தில் நடைபெற்றுவரும் ஒடுக்குமுறை உள்ளிட்ட எல்லா அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து குரலெழுப்பி வரும் என்றார்.அமெரிக்காவுடனான மலேசியாவின் அரசதந்திர உறவு இன்னும் சிறப்பாகவே உள்ளது. இவ்விரு நாடுகளுக்கு இடையிலான பங்காளித்துவமும் ஒத்துழைப்பும் சீராகவே உள்ளன. அமெரிக்கத் தலைவர்களுடனும் அது அடிக்கடி சந்திப்பை நடத்தி வருகிறது என்று மக்களவையில் அன்வார் தெரிவித்தார்.
ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை மலேசியா மற்றும் அமெரிக்கா இடையிலான மொத்த இருவழி வர்த்தகம் 26,428 கோடி வெள்ளியாக இருந்தது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 20,478 கோடி வெள்ளி வர்த்தக அளவுடன் ஒப்பிடுகையில் இது 29.1விழுக்காடு அதிகமாகும் என்றார் அன்வார்.
பாலஸ்தீன மக்களின் உரிமைகள் குறித்து பிரதமர் அன்வார் துணிச்சலாக குரலெழுப்பி வருவதால் மலேசியா மீது அமெரிக்கா தடை விதிக்கும் ஆபத்து உள்ளதா என்று பக்காத்தான் ஹராப்பானின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் எழுப்பிய வினாவுக்கு பதிலளித்தபோது அன்வார் அந்த விளக்கத்தை அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *